குழந்தை மடியில் வைத்து கார் ஓட்டிய டிரைவர்.. சிவகங்கையில் விபரீதம்.. 3 பேர் சம்பவ இடத்திலேயே மரணம்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காளையர் கோவில் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழுந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குழந்தைகளை சிலர் ஆர்வமிகுதியில் காரில் டிரைவர் சீட்டில் அமர வைத்து ஓட்டுவார்கள். அப்படி ஓட்டும் போது மிகப்பெரிய அசம்பாவிதங்களும் நடக்கும் அபாயமும் இருக்கும். அப்படித்தான இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.
கைக்குழந்தையை மடியில் வைத்து காரை ஓட்டிய போது திடீரென குழந்தை தவறி விழப்போனதால் அதை பிடிக்க முயற்சி செய்த பசும்பொன், காரின் கட்டுப்பாட்டை நழுவ விட்டார். இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து 3 பேர் பலியாகி உள்ளனர். 8 பேர் படுகாயம் காயம் அடைநத்னர்.
சாமி கும்பிட புறப்பட்டனர்
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சேர்ந்தவர் ஆறுமுகம்(65), மதுரை, தத்தனேரியை சேர்ந்த முத்துராமலிங்கம் மனைவி அல்லிராணி(45), மதுரை முல்லை நகரை சேர்ந்த முத்தையா என்பவரது மகன் ராஜா(52) மற்றும் ஒரு கைகுழந்தை உள்பட 11 பேர் கார் மூலம் திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவிலுக்கு காரில் சென்றுள்ளனர். காரை, அல்லிராணி மகன் பசும்பொன்(21) ஓட்டி வந்துள்ளார்.
3 பேர் மரணம்
காளையார்கோவில் அடுத்த உலக ஊரணி என்ற இடத்தின் அருகே வந்தபோது திடீரென கார் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. . இதில் ஆறுமுகம், அல்லிராணி, ராஜா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விசாரணை
காரை ஓட்டி வந்த பசும்பொன் உள்ளிட்ட 8 பேர் காயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.
தவறிய குழந்தை
இதனிடையே கைக்குழந்தையை மடியில் கிடத்தியவாறு பசும்பொன் காரை ஓட்ட முயன்றதாகவும் ஒரு கட்டத்தில் மடியில் இருந்து நழுவிய குழந்தையை பிடிக்க முயன்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்ததாகவும் இதனால் விபத்து நடந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.