வானர சேட்டைனா அது இதுதானா? தீபாவளியன்று தீக்கிரையான வீடு! குரங்கு தான் காரணம்! எப்படி நடந்தது?
சிவகங்கை : சிவகங்கை தீபாவளி பண்டிகையின் போது குரங்கு வீட்டுக்குள் புகுந்து மெழுகுவர்த்தியை தட்டி விட்டதால் வீடு முழுவதும் எரிந்து சேதமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தீபாவளியன்று வீடு தீக்கிரையான சோக சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே காளாப்பூரில் வசித்து வருபவர் சண்முகசுந்தரம் இவருக்கு இரண்டு மகள்கள் 3 வயதிலும்,1 வயதிலும் உள்ளனர். தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வெடிக்கவேண்டும் என 3 வயது மகள் அவரது அம்மா ராணியை வற்புறுத்தியுள்ளார்.
அடம் பிடித்து அழுததால் மெழுகுவர்த்தியை பற்றவைத்துள்ளார். அதன் அருகிலே வெடிகள் வெடிப்பதற்காக புஸ்வானம்.ராக்கெட் உள்ளிட்ட வெடிகள் வைத்துள்ளார்.

படையெடுத்த குரங்குகள்
அந்த நேரத்தில் 5 க்கும் மேற்பட்ட குரங்குகள் வருவதை கண்ட ராணி குரங்குகளை விரட்ட வெளியில் வந்துள்ளார். வீட்டின் முன்பகுதி இருபுறமும் கதவுகள் இல்லாததால் அதற்குள் இரண்டு குரங்குகள் வீட்டின் உள்ளே புகுந்துள்ளது. குழந்தைகளை கடித்துவிடும் என பயந்த ராணி வீட்டிற்குள் சென்று குரங்கை விரட்டும்போது குரங்கு மெழுகுவர்த்தியை தட்டிவிட்டதால் ஏற்பட்ட வினை வெடிகளில் பட்டு புஸ்வானம் ராக்கெட் உள்ளிட்ட வெடிகள் அனைத்தும் வெடித்து நாலாபுறமும் சிதறின.

தீ விபத்து
இதில் மேல் பகுதி கூரை என்பதால் தீ மளமளவென பரவி வீடு முழுவதும் தீப்பற்றி எரியத்தொடங்கின. பதற்றம் அடைந்த ராணி குழந்தைகளை துாக்கிக் கொண்டு வீட்டைவிட்டு வெளிய வந்து அருகில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். உடனே சிங்கம்புணரி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்திற்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

வீடு முழுமையாக சேதம்
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிலைய அலுவலர் அருள்ராஜ் தலைமையிலான வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனால் வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டி ஏர்கூலர் டி.வி. மரசோபா தண்ணீர் சுத்திகரிப்பு சாதனம் மின்சாதன பொருட்கள் உள்ளிட்ட ஏராளமான வீட்டு உபயோக பொருட்கள் என சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின.

குரங்கு சேட்டை
மகிழ்ச்சியாக தீபாவளியை குடும்பத்தினர் கொண்டாடிய மறுதினமே குரங்கு சேட்டையால் வீடு தீப்பற்றியது. இதனால் குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் உள்ளனர். குரங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து நாளுக்கு நாள் அட்டகாசம் செய்து குடிசை வீடு தீப்பற்றி பொருட்கள் சேதமாகி உள்ளது. குடியிருப்பு பகுதிகளில் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விடவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications