ராஜேந்திர பாலாஜி முக்கிய தலைவர்.. சீக்கிரமே குற்றமற்றவர் என்று நிரூபிப்பார் பாருங்க! பாஜக அண்ணாமலை
சிவகங்கை: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விரைவில் குற்றமற்றவர் என நிரூபிப்பார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் வேலுநாச்சியாரின் 292 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது உருவச்சிலைக்கு தமிழக பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில் தமிழக மக்கள் மேல் 7 ஆண்டுகளாக பிரதமருக்கு அன்பு, பாசம், காதல் குறையாமல் இருந்து வருகிறது. திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சு ஆளும் கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சு பேசுகிறது.

ராஜீவ் காந்தி
இது திமுகவுக்கு அம்னீசியா உள்ளதையே காட்டுகிறது. ராஜீவ் காந்தி கொலை குற்ற வழக்கில் 7 பேரின் விடுதலை சட்டபூர்வமான முறையில் நடந்து கொண்டிருக்கிறது. இதில் யாரும் உணர்ச்சிவசப்படாதீர்கள். முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பொருத்தவரை எங்களது கூட்டணி தலைவர்களில் முக்கியமானவர்.

அண்ணாமலை
அவர் விரைவில் குற்றமற்றவர் என நிரூபித்து வருவார். அதுவரை காத்திருக்க வேண்டும் என பாஜக அண்ணாமலை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ 3 கோடி மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விசாரணை
இது மட்டுமல்லாமல் இன்னும் பிற வழக்குகளும் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் 17ஆம் தேதி முதல் அவர் தலைமறைவாகியுள்ளார். அவரை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடப்பட்டு வருகிறது. அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

வங்கிக் கணக்குகள் முடக்கம்
இந்த நிலையில் அவர் ஊர் விட்டு ஊர் செல்லாமல் இருக்க அவரது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. எனினும் அவரது இருப்பிடம் கண்டுபிடிக்க முடியவில்லை. அவருக்கு அதிமுகவில் சில நிர்வாகிகள் உதவி செய்வதாக வந்த தகவலை அடுத்து தனிப்படையினர் அவர்களிடம் ராஜேந்திர பாலாஜி குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ராஜேந்திர பாலாஜியை பிடிக்க இத்தனை தனிப்படையா, அவர் என்ன தேச துரோகியா என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications