சமத்துவபுரத்தை திறந்து வைத்தார் முதல்வர்.. “ஆட்சிக்கு வந்தால் திறப்பேன்”.. சொன்னதைச் செய்த ஸ்டாலின்!
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரிக்கு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், கோட்டை வேங்கைப்பட்டி கிராமத்தில் இன்று சமத்துவபுரத்தை திறந்து வைக்கிறார்.
கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்கு சிங்கம்புணரி பகுதிக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்தால், சமத்துவபுரம் வீடுகள் திறக்கப்படும் என உறுதியளித்தார். அதன்படி இன்று தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுகிறார்.
அதன்பின்னர், காரையூர் சோளம்பட்டி பிரிவில் நடக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சுமார் 10,000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்.
ஒரே நேரத்தில் 12 துறைகள்! அலசி ஆராய்ந்து ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு
Recommended Video
சிவகங்கை மாவட்ட விசிட்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்தில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று மதுரை வந்த ஸ்டாலின், மதுரையில் கலைஞர் நூலகம் கட்டும் பணிகளை ஆய்வு செய்தார். இன்று காலை மதுரையில் இருந்து காரில் புறப்பட்டு சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கோட்டை வேங்கைப்பட்டி கிராமத்துக்கு வருகிறார். அங்கு 100 வீடுகள் கொண்ட பெரியார் நினைவு சமத்துவபுரத்தை காலை 9 மணிக்கு திறந்து வைத்து, பயனாளிகளுக்கு வீடுகளை வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்.
பெரியார் நினைவு சமத்துவபுரம்
கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் இருந்தபோது தமிழகம் முழுவதும் அனைத்துச் சாதியினரும் ஒரே இடத்தில் வசிக்கும் வகையில் சமத்துவபுரங்கள் திறக்கப்பட்டன. அதன்படி, சிங்கம்புணரி அருகே கண்ணமங்கலப்பட்டி ஊராட்சி கோட்டை வேங்கைப்பட்டியில் கடந்த 2010-ஆம் ஆண்டு சமத்துவபுரம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ.1.92 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தெடங்கப்பட்டன. அங்கு ரேஷன் கடை, தார்ச் சாலை, குடிநீர்த் தொட்டி, தெருவிளக்கு வசதிகளுடன் 100 வீடுகள் கட்டப்பட்டன.
அதிமுக ஆட்சியில்
பணிகள் முடிவடையாத நிலையில் 2011-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்தது. இதையடுத்துக் கட்டுமானப் பணிகள் கிடப்பில் போடப்பட்டன. அதைத் தொடர்ந்து, பல்வேறு தரப்பினர் வலியுறுத்தலை அடுத்து மீண்டும் கட்டுமானப் பணிகள் தொடங்கி 2012-ஆம் ஆண்டு முழுமையடைந்தன. கடந்த 2016ஆம் ஆண்டு பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வீடுகள் வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதன் பிறகும் சமத்துவபுரம் திறக்கப்படவில்லை. இதனால் புதிதாகக் கட்டப்பட்ட வீடுகள், பராமரிப்பின்றி பழுதடைந்தன. வீடுகளைச் சுற்றிலும் மரங்கள் முட்செடிகள் வளர்ந்தன. சில வீடுகளில் விரிசல்களும் ஏற்பட்டன.
உறுதியாகச் சொன்ன ஸ்டாலின்
கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்கு திருப்பத்தூர் பகுதிக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்தால், சமத்துவபுரம் வீடுகள் திறக்கப்படும் என உறுதியளித்தார். தற்போது திமுக ஆட்சி அமைந்துள்ள நிலையில், கட்டுமானப் பணிகள் முடிவடைந்து 9 ஆண்டுகளுக்குப் பிறகு சமத்துவபுரம் வீடுகளைத் திறக்க ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நடவடிக்கை எடுத்தார். அப்பகுதியில் சீரமைப்பு பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன. விரிசல் விட்டிருந்த வீடுகள் மீண்டும் சீரமைக்கப்பட்டன.
திறந்து வைக்கிறார்
சமத்துவபுரம் வீடுகள் சீரமைப்பு பணிகள் முடிந்த நிலையில், இன்று காலை 9 மணியளவில் திறந்து வைக்க இருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு, திருப்பத்தூர் அருகே காரையூரில் காலை 10 மணிக்கு நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின். பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்துப் பேசவிருக்கிறார். அதன்பின்னர் அவர் புதுக்கோட்டை மாவட்டத்திற்குச் செல்கிறார்.
திறந்து வைத்தார்
சிங்கம்புணரி அருகே கோட்டை வேங்கைப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். 100 வீடுகள், அங்கன்வாடி மையம், நியாய விலைக்கடை, சிறுவர் பூங்கா உள்ளிட்டவை என 13 ஏக்கர் பரப்பளவில் சமத்துவபுரம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னரே பணிகள் நிறைவு பெற்ற நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், மீண்டும் புதுப்பிக்கப்பட்ட நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்துவைத்து பயனாளிகளிடம் வீடுகளை ஒப்படைத்துள்ளார்.
புகைப்படம்
கோட்டை வேங்கைப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் சிறுவர் பூங்காவையும் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின். சமத்துவபுரத்தில் வீடு ஒதுக்கப்பட்டவர்கள் முதல்வர் ஸ்டாலினுடன் குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த விழாவுக்குப் பிறகு காரையூர் அருகே நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காகப் புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்.