"முதல்ல கட்சியை பதிவு பண்ணட்டும்ங்க.." ரஜினிகாந்த் பற்றிய கேள்விக்கு எடப்பாடியார் பொளேர்
சிவகங்கை: ரஜினிகாந்த் கட்சி துவங்குவது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது கருத்தை கூற மறுத்துவிட்டார்.
சிவகங்கையில் இன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு நிருபர்கள் கேள்விகளுக்கு முதல்வர் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மாநில அரசில் டெண்டர் விடுகிறோம். ஆன்லைன் மூலமாக, பணம் கட்டிவிட முடியும். ஆனால், இதில் ஊழல் என்கிறார் ஆ. ராசா. 2ஜி ஸ்பெக்ட்ரமில் ஊழல் இல்லை என்கிறார். இது வெட்டவெளிச்சமாக தெரிகிறது. ஒரு லட்சம் கோடி கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
சென்னையின் புறநகரில் மழை நீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு
அமைச்சராக இருந்தபோதே வழக்கு
இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. வழக்கு முடிந்த பிறகு ராசா எங்கே இருப்பார் என்பதை புரிந்து கொள்ளலாம். இவர் அங்கம் வகித்த அரசு இவரை குற்றவாளி என்று சிறையில் அடைத்தது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இவரை சிறையில் அடைத்து இருந்தால் கூட சொல்லலாம். ஆனால் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி நடைபெற்றபோது அதில் அமைச்சராக அங்கம் வகித்தார். அப்போது இவர் மீது குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆதாரத்தை கொடுக்கவில்லை
சிபிஐ உரிய நேரத்தில் சரியான ஆதாரத்தை சமர்ப்பிக்காத காரணத்தால்தான் அவர் தப்பியுள்ளார். ராசா நிரபராதி என்று அறிவிக்கப்படவில்லை என்றார் முதல்வர்.
முதலில் பதிவு செய்யட்டும்ங்க
இதனிடையே, ரஜினிகாந்த் கட்சி துவங்குவதாக வெளியிட்ட அறிவிப்பு குறித்து நிருபர்கள் கேட்டபோது, "ரஜினிகாந்த் முதலில் கட்சியை பதிவு செய்யட்டும். அதற்கு பிறகு என்னிடம் கேளுங்கள். இப்போது அறிவித்து மட்டுமே உள்ளார். கட்சியை பதிவு செய்யாத நிலையில் எதையும் சொல்ல முடியாது" என்றார்.
ஓபிஎஸ் கருத்து
துணை முதல்வர் வரவேற்றுள்ளாரே, என்ற கேள்விக்கு, அது அவருடைய கருத்து. எல்லோரும் தங்கள் கருத்தை கூறலாம். அதில் தவறு கிடையாது. என்னை பொருத்தவரை, ரஜினிகாந்த் கட்சியை பதிவு செய்தால்தான் அது ஒரு கட்சி என்று வரும். அதன் பிறகுதான் கருத்து கூற முடியும்.
நான் ரெடி
இப்போது கற்பனையில் கூறும் கருத்துகளுக்கு நான் பதில் சொல்ல முடியாது. ஜாக்கிரதையாக நான் பதில் சொல்ல வேண்டும். நீங்கள் எப்படி எல்லாம் கேள்வி கேட்பீர்கள் என்று தெரியும். அதற்கு தயாராக தான் வந்துள்ளேன். இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.