சீட் உறுதியாய்ருச்சாமே.. சிவகங்கையில் களம் இறங்குகிறாராம் எச்.ராஜா!
சென்னை: சிவகங்கை தொகுதியில் எச். ராஜா களம் இறங்கப் போவதாக கூறுகிறார்கள்.
சிவகங்கை தொகுதி திராவிட கட்சிகள் பெரும்பாலும் போட்டியிட விரும்பாத தொகுதி. பெரும்பாலும் இத்தொகுதி கன்னியாகுமரி தொகுதி போல கூட்டணி கட்சிகளுக்கே விட்டுக் கொடுக்கப்படும் தொகுதி. இந்த தொகுதியில் திமுக மற்றும் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்ததால் காங்கிரஸ் 9 முறை இந்த தொகுதியில் வென்றுள்ளது. திமுகவும் அதிமுகவும் தலா இருமுறை இந்த தொகுதியை கைப்பற்றியுள்ளன.
இந்த முறையும் திமுக கூட்டணியில் இத்தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியிலும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்த தொகுதியில் பாஜகவின் தேசிய செயலாளர் எச் ராஜா களம் இறங்கவுள்ளார் என்று பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.
தங்கத்தில் மோசடி.. மாஜி கலெக்டர் வீர சண்முகமணி திடீர் கைது.. பொன்மாணிக்கவேல் அதிரடி
அதிமுகவுடன் கூட்டணி பேசுவதற்காக மத்திய அமைச்சர் பியுஸ் கோயல் தமிழகம் வந்தபோது அதிமுகவினர் கூட்டணி பேசும்போதே அவரிடம் முன்வைத்த ஒரு கோரிக்கை தயவு செய்து எச் ராஜாவுக்கு தேர்தலில் போட்டியிட சீட் வழங்காதீர்கள் என்பதுதான். கூட்டணி பேச்சுவார்த்தையின்போது இதை பியுஸ் கோயலும் தலைமையிடம் தெரிவிப்பதாக கூறியிருந்தார்.
சாரணர் தேர்தல், பெரியார் சிலையை இடிப்பேன் என்ற விவகாரத்தில் எச் ராஜாவின் அட்மின் கூறியது பின்னர் நீதிமன்றங்களை விமர்சித்தது என்று அவரது "செல்வாக்கு" ஏகத்துக்கும் எகிறி கிடப்பதால் அவர் போட்டியிட்டால் தங்களுக்கும் அது பாதிப்பை உண்டாக்கும் என்று கருதியே அதிமுகவினர் பியுஸ் கோயலிடம் இந்த கோரிக்கையை முன்வைத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 2014 ம் ஆண்டு இந்த தொகுதியில் அதிமுகவும் திமுகவும் நேரடியாக மோதியதில் அதிமுக வென்றது. தற்போதைய எம்.பி.யான செந்தில்நாதன் இந்த தொகுதியை கேட்டு அதிமுகவில் விருப்பமனு அளித்திருந்தார். அதே வேளையில் இந்த தொகுதிக்கு அதிமுகவில் மட்டும் 60 பேர் விருப்ப மனு அளித்திருந்தனர். பாஜகவை பொருத்தமட்டில் இந்த தொகுதியில் போட்டியிட்டால் தொகுதி முழுவதும் தேர்தல் வேலை செய்யவே இங்கு போதிய ஆள்கள் இல்லை என்பதுதான் எதார்த்தம்.
இப்படிப்பட்ட நிலையில் சிவகங்கை தொகுதியை தனக்கு பெற்றுத் தரவேண்டும் என்று பாஜக மேலிடத்திற்கு எச் ராஜா பலவகையிலும் அழுத்தம் கொடுத்துள்ளார். இதனையடுத்து அதிமுக தலைமைக்கு பாஜகவில் இருந்து சிவகங்கை தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்க சொல்லி உத்தரவு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இப்போது இந்த தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எச் ராஜா இந்த தொகுதியில் போட்டியிடுவதும் உறுதியாகிவிட்டது என்றே கூறுகிறார்கள் பாஜகவினர்.
தேர்தல் வேலைகள் செய்ய கிராமப்பகுதிகளில் ஆள்கள் இல்லாத நிலையில் என்ன செய்வார் ராஜா?