டுவிஸ்ட்.. வெடித்த கலகம்! “ஓபிஎஸ்-ஐ அவமதித்த அண்ணாமலை”.. உறவில் விஷம் கலப்பதாக ஆதரவாளர்கள் தீர்மானம்
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஓ.பன்னீர்செல்வத்தை அவமதித்துவிட்டதாக சிவகங்கையில் அவரது ஆதரவாளர்கள் கண்டன தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
சிவகங்கை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஓ.பன்னீர்செல்வத்தை அவமதித்துவிட்டதாக சிவகங்கையில் அவரது ஆதரவாளர்கள் கண்டன தீர்மானம் நிறைவேற்றி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எடப்பாடி பழனிசாமியை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டதையும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கண்டித்து உள்ளார்கள்.
சிவகங்கையில் அதிமுக ஓபிஎஸ் அணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக கூட்டணி கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு எதிராகவே அவர்கள் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்கள்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவமதிப்பதாக அவர்கள் தீர்மானத்தில் குறிப்பிட்டு உள்ளனர்.

அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம்
அண்ணாமலை அதிமுக - பாஜக இடையிலான உறவில் விஷம் கலப்பதாக குற்றம்சாட்டி உள்ள அவர்கள், ஓ.பன்னீர்செல்வத்தை சந்திப்பதற்கு முன்பாக எடப்பாடி பழனிசாமியை அண்ணாமலை சந்தித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரை அண்ணாமலை திரும்பப்பெற கோரியதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்கள்.

எடப்பாடி இடைக்கால பொதுச்செயலாளரா?
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரிப்பதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளர் என்று அவர் குறிப்பிட்டு இருந்ததற்கு ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கண்டனம் தெரிவித்து இருக்கின்றனர்.

அதிமுக வேட்பாளர்
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவேரா மறைவால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ், தேமுதிக, அமமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளரை அறிவித்த நிலையில் அதிமுக இதை அறிவிப்பதில் தாமதம் காட்டியது. ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையிலான உட்கட்சி பூசலால் வேட்பாளர் தேர்வில் குழப்பம் ஏற்பட்டது.

எடப்பாடி தரப்பு வேட்பாளர்
இதில் பாஜக போட்டியிட விரும்புவதாகவும் செய்திகள் வெளியாகின. அண்ணாமலையை சந்திக்க எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் காத்திருந்ததாகவும் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், நீண்ட இழுபறிக்கு பின் முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசுவை எடப்பாடி பழனிசாமி ஈரோடு கிழக்கு வேட்பாளராக அறிவித்தார்.

பாஜக கூட்டணியில் விலகலா?
அவர்களின் தேர்தல் பணிமனையில் கூட்டணி பெயர் மாற்றப்பட்டதால் எடப்பாடி பழனிசாமி பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியதாகவும் பேசப்பட்டது. அதே நாளில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் செந்தில் முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் இரட்டை இலை சின்னம் முடங்கும் என்றும், அதிமுக ஆதரவாளர்களின் வாக்குகள் மூன்றாக பிரியும் என்று கூறப்பட்டது.

ஓபிஎஸ் வேட்பாளர் வாபஸ்
இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தங்கள் தரப்பு வேட்பாளரை வாபஸ் பெறுவதுடன் இரட்டை இலைக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தார். அதே நேரம் தென்னரசுவை வேட்பாளராக ஏற்பதாக பொதுக்குழு உறுப்பினர்கள் வழங்கியதாக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் வழங்கிய கடிதத்தை தேர்தல் ஆணையம் ஏற்று கையெழுத்திட அனுமதித்தது.

பாஜக ஆதரவு
இதன் மூலம் எடப்பாடி பழனிசாமியால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில் அவருக்கு பாரதிய ஜனதா கட்சியும் ஆதரவு அளிப்பதாக அறிவித்தார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை. இந்த நிலையில் அவருக்கு எதிராக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications