குழந்தையை வைத்து சிவகங்கை ரவுடி செய்த வேலையை பாருங்க.. இப்போ கம்பி எண்ணுறாரு!
சிவகங்கை: குழந்தையின் கையில் பட்டாக்கத்தியை கொடுத்து கேக் வெட்ட வைத்த பிரபல ரவுடியை சிவகங்கை போலீஸார் கைது செய்துள்ளனர்.
குழந்தையின் கையில் பட்டாக்கத்தியை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அதனை வீடியோ எடுத்தும் அந்த ரவுடி சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கிறார்.
இதுபோல, குழந்தைகளை தவறாக வழிநடத்தும் நபர்கள் மீது தயவுதாட்சண்யம் இல்லாமல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தடம் மாறும் இளைஞர்கள்
ஒருகாலத்தில் ரவுடி அல்லது போக்கிரி எனக் கூறுவது மிகவும் இழிவான ஒன்றாக கருதப்பட்டது. ஆனால் காலம் மாற, ரவுடி அல்லது பொறுக்கி எனக் கூறுவது ஒருவித ஃபேஷனாகி விட்டது. இதற்கு கடந்த 20 ஆண்டுகாலமாக வந்த சினிமாக்களுக்கு பெரும் பங்கு உண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஒழுக்கமாக இருப்பதையும், பெரியவர்கள் பேச்சை கேட்பதையும் கிண்டல் குறியீடுகளாக சினிமாக்கள் காட்டத் தொடங்கின. அதே சமயத்தில், தீயப்பழக்கங்களை கொண்டவனையும், ரவுடித்தனம் செய்பவனையும் ஹீரோவாக இத்தகைய சினிமாக்ககள் கொண்டாடின. அதன் விளைவு, இன்றைய இளைஞர்கள் சிலர் தன்னை 'ரவுடி' எனக் கூறுவதை ரசிக்க தொடங்கி விட்டார்கள். இதனால்தான், டிக்டாக் உள்ளிட்டவற்றில் கத்தி, அரிவாளை வைத்து சில 'சில்வண்டுகள்', கெத்து என நினைத்துக் கொண்டு பட்டாக்கத்தியை சுழற்றிக் கொண்டிருக்கின்றன.

குழந்தையின் பிறந்தநாள்..
அந்த வகையில், சிவகங்கை மாவட்டத்தில் இதுபோன்ற ஒரு வெட்கக்கேடான சம்பவம் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள சத்யா நகரைச் சேர்ந்தவர் அஜித் குமார் (25). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, வழிப்பறி, கஞ்சா விற்பனை போன்ற ஏராளமான வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் உள்ளன. இந்த சூழலில், அஜித் குமாரின் அண்ணன் மகனின் முதலாம் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

குழந்தை கையில் பட்டாக்கத்தி..
இதில் கலந்துகொண்ட அஜித்குமார், தான் வைத்திருந்த பட்டாக்கத்தியை எடுத்து அந்தக் குழந்தையின் கையில் கொடுத்து கேக் வெட்டச் செய்தார். ஆனால் இந்த மோசமான செயலை அவர் செய்யும் போது, குழந்தையின் பெற்றோர் உட்பட யாருமே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதுடன் மட்டுமல்லாமல் அதை கைத்தட்டி ரசிக்கவும் செய்கின்றனர். மேலும், சுற்றியிருந்தவர்கள் அவர் ஏதோ சாதனையை செய்தது போல சுற்றி நின்று அதை வீடியோவும் எடுத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, அஜித்குமார் அந்த வீடியோவை தனது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்டார்.

கைது நடவடிக்கை
இந்த வீடியோ வெளியிடப்பட்ட சிறிது நேரத்திலேயே ஆயிரக்கணக்கானோர் இதை பார்த்தும், கமெண்டும் செய்திருந்தனர். இதில் பல கமெண்டுகள் அந்த நபரை திட்டித்தீர்த்தவையாகவே இருந்தன. இதனிடையே, சிலர் இந்த வீடியோவை காவல்துறை அதிகாரிகளுக்கு 'டேக்' செய்தனர். இதையடுத்து, குழந்தையின் கையில் பட்டாகத்தியை கொடுத்த ரவுடி அஜித் குமாரை போலீஸார் கைது செய்து செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications