நீ யாரா வேணாலும் இரு.. ஆனா என்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இரு.. ஹேசல்வுட்டை பதம் பார்த்த சூர்யவன்ஷி!
மும்பை: ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணியின் இளம் நட்சத்திர வீரரான வைபவ் சூர்யவன்ஷி 15 பந்துகளில் அரைசதம் விளாசி இருக்கிறார். அதிலும் ஆஸ்திரேலியா ஜாம்பவான் ஹேசல்வுட் பவுலிங்கில் 4, 4, 4, 6 என்று விளாசியது வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்களை சேர்த்தது. அதிகபட்சமாக ரஜத் பட்டிதர் 40 பந்துகளில் 63 ரன்களையும், வெங்கடேஷ் ஐயர் 15 பந்துகளில் 29 ரன்களையும் சேர்த்தனர்.

இதன்பின் ராஜஸ்தான் அணிக்காக ஜெய்ஸ்வால் - வைபவ் சூர்யவன்ஷி கூட்டணி தொடக்கம் கொடுத்தது. புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரிலேயே வைபவ் சூர்யவன்ஷி 2 பவுண்டரிகளை விளாசி தள்ளினார். தொடர்ந்து 3வது ஓவரை வீசிய அபினந்தன் சிங் பவுலிங்கில் 2 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சரை விளாசினார். தொடர்ந்து ஹேசல்வுட் 2வது ஓவரை வீச வந்தார்.
இதனால் வைபவ் சூர்யவன்ஷி எப்படி சமாளிப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால் வைபவ் சூர்யவன்ஷி கொஞ்சம் கூட அசராமல் 4, 4, 4, 6 என்று விளாசி தள்ளினார். இது வர்ணனையில் இருந்த அத்தனை பேருக்கும் பிரமிப்பை ஏற்படுத்தியது. பின்னர் புவனேஷ்வர் குமார் வீசிய அடுத்த ஓவரில் தொடர்ந்து 2 சிக்சரை விளாசி 15 பந்துகளில் அரைசதத்தை எட்டினார்.
ஐபிஎல் தொடரில் வைபவ் சூர்யவன்ஷி 20 பந்துகளுக்குள் அரைசதம் அடிப்பது 3வது முறையாகும். அதேபோல் பவர் பிளே ஓவர்கள் முடிவதற்குள் வைபவ் சூர்யவன்ஷி 3வது முறையாக அரைசதம் விளாசி இருக்கிறார். தொடர்ந்து க்ருணால் பாண்டியா, டிம் டேவிட் உள்ளிட்டோரின் ஓவர்களையும் வைபவ் சூர்யவன்ஷி பதம் பார்த்தார்.
சிறப்பாக ஆடிய வைபவ் சூர்யவன்ஷி 26 பந்துகளில் 7 சிக்ஸ், 8 பவுண்டரி உட்பட 78 ரன்களை எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். ஏற்கனவே மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பும்ரா வீசிய முதல் பந்திலேயே வைபவ் சூர்யவன்ஷி சிக்ஸ் அடித்தார். தற்போது ஹேசல்வுட்டையும் விளாசி இருப்பது வைபவ் சூர்யவன்ஷி மீதான பிரமிப்பை அதிகப்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications