இதுதான்டா கம்பேக்.. 26 மாதங்களுக்கு பின் இந்திய டி20 அணிக்குள் வந்த ஸ்ரேயாஸ் ஐயர்.. பிசிசிஐ அப்டேட்!
மும்பை: 26 மாதங்களுக்கு பின் இந்திய டி20 அணிக்கு நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் கம்பேக் கொடுத்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது வாஷிங்டன் சுந்தர் காயம் அடைந்த நிலையில், அவரின் இடத்திற்கு ரவி பிஷ்னாயும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்க உள்ளது. இந்த டி20 தொடருக்கான அணி கடந்த மாதமே அறிவிக்கப்பட்டுவிட்டது. டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட உள்ள இந்திய அணியே, இந்த டி20 தொடரிலும் விளையாடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் விஜய் ஹசாரே தொடரின் போது திலக் வர்மா காயம் அடைந்தார்.

அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், 3 வாரங்கள் வரை ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனால் திலக் வர்மா திட்டமிட்டபடி நியூசிலாந்து டி20 தொடரில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்தது. இதன்பின் முதல் பாதி தொடரில் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டு வந்தது.
அதேபோல் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது நட்சத்திர ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் காயம் அடைந்தார். இதன் காரணமாக ஒருநாள் தொடரில் இருந்து விலகிய அவர், ஓய்வில் இருக்கிறார். அவர் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு வந்து பயிற்சி மேற்கொள்வதற்கு முன் சில நாட்கள் ஓய்வில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் நியூசிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணியில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் முதல் 3 போட்டிகளில் இருந்து திலக் வர்மாவும் விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திலக் வர்மாவுக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 26 மாதங்களுக்கு பின் இந்திய டி20 அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் திரும்பி இருக்கிறார்.
அதேபோல் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ரவி பிஷ்னாய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரவி பிஷ்னாய் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த டி20 தொடரில் விளையாடி இருந்தார். டி20 உலகக்கோப்பை நெருங்கும் சூழலில், இருவருக்கும் தங்களின் திறமையை நிரூபிக்க சிறந்த வாய்ப்பு அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications