தரம்சாலாவில் சிறப்பு ரயில் ஏற்பாடு.. உச்சக்கட்ட பாதுகாப்புடன் வெளியேறும் கிரிக்கெட் வீரர்கள்!
தரம்சாலா: தரம்சாலாவில் இருந்து பஞ்சாப் மற்றும் டெல்லி அணியின் வீரர்கள், நிர்வாகிகள், வர்ணனையாளர்கள், கேமராமேன்கள், ஊழியர்கள் என்று அனைவரும் வெளியேறுவதற்கு சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் செய்யப்படாது என்று கூறப்பட்டுள்ள நிலையில், ஐபிஎல் தொடர் தொடர்ந்து நடத்தப்படுமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
பஹ்லகாம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் தரப்பில் ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டது. இந்த ஆபரேஷன் சிந்தூர் மூலமாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்த நிலையில் இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர்-க்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் ராணுவம் தரப்பில் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதனை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்து, தனது பதிலடியை லாகூரில் செய்து வருகிறது. இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பஞ்சாப், ஜம்மு - காஷ்மீர், பதான்கோட், ஜெய்சல்மர் உள்ளிட்ட பகுதிகள் பிளாக் அவுட் செய்யப்பட்டுள்ளன. அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
அதேபோல் தரம்சாலாவில் நடைபெற்று வந்த பஞ்சாப் - டெல்லி அணிகளுக்கு இடையிலான ஆட்டமும் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. மைதானத்தில் இருந்த ரசிகர்கள் உடனடியாக பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில் தரம்சாலாவில் இருந்து கிரிக்கெட் வீரர்கள் பாதுகாப்புடன் வெளியேறுவதற்கு பிசிசிஐ நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஹிமாச்சல் பிரதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால், கிரிக்கெட் வீரர்கள் வெளியில் வருவதற்கு சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பிசிசிஐ நிர்வாகி ராஜீவ் சுக்லா பேசுகையில், உனா பகுதியில் இருந்து கிரிக்கெட் வீரர்கள் பயணம் செய்வதற்கு சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தரம்சாலாவிற்கு அருகில் இருக்கும் பகுதி என்பதால், வீரர்களால் எளிதாக வந்து சேர முடியும்.
ஐபிஎல் தொடரை தொடர்ந்து நடத்துவது குறித்து நாளை ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும். தற்போது, எங்களுக்கு வீரர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம். கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பு எந்த சமரசமும் செய்ய மாட்டோம் என்று தெரிவித்துள்ளார். இதனால் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பாதுகாப்பு காரணங்களுக்காக ரத்து செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications