இலங்கை அதிபர் தேர்தல்: ராஜபக்சேவுக்கு மேலும் ஒரு ஷாக்!
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் ஜெயிக்க இருக்கிற அத்தனை உத்திகளையும் பயன்படுத்தி வரும் ராஜபக்சேவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அவரது கட்சியைச் சேர்ந்த அமைச்சர் மற்றும் எம்பி பதவி விலகி எதிர்க்கட்சி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இலங்கை அதிபர் தேர்தல் வருகிற 8-ந் தேதி நடக்கிறது. இதில் ராஜபக்சே மீண்டும் ஆளுங்கட்சி கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பொது வேட்பாளராக மைதிரிபால சிறிசேனா போட்டியிடுகிறார். அவருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் சில முஸ்லிம் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது கூட்டணி அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் சில கட்சிகள், பல அமைச்சர்கள், எம்.பி.க்கள் ஏற்கனவே விலகி, எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். இப்போது மேலும் ஒரு அமைச்சர் விலகியுள்ளார்.
அவர் உயர்கல்வித் துறை துணை அமைச்சராக இருந்த நந்திமித்ரா ஏகனாவகே. பெரும்பான்மை புத்தமத சமுதாயத்தை சேர்ந்த அவர் அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் மைதிரிபால சிறிசேனாவை ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ராஜபக்சேவின் சுதந்திரா கட்சியின் மூத்த தலைவரான நந்திமித்ரா தனது கட்சித் தலைவருக்கு ராஜினாமா கடிதம் அனுப்பினார். அதில், நமது நாட்டுக்கு சிறந்த எதிர்காலம் அமைவதற்காக நான் அரசை விட்டு விலகுகிறேன் என்று கூறியுள்ளார். இவருடன் சேர்த்து இதுவரை ஆளுங்கட்சியில் இருந்து 25 எம்.பி.க்கள் விலகி எதிர்க்கட்சி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புத்திரசிகாமணி மற்றும் லலித் திசநாயக்கா போன்ற அமைச்சர்களும் மைதிரிபால சிறிசேனாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் முதலீட்டு துறை துணை மந்திரி அமைச்சர் முஸ்தபா விலகி எதிர்க்கட்சி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications