இலங்கை: வடபகுதியை அதானி குழுமத்துக்கு விற்பனை செய்ய சதி.. ஈழத் தமிழ் மீனவர்கள் பகிரங்க குற்றச்சாட்டு
யாழ்ப்பாணம்: இலங்கையின் வடக்குப் பகுதியை இந்தியாவின் அதானி குழுமத்துக்கு விற்பனை செய்ய சதி நடப்பதாக ஈழத் தமிழர்களின் மன்னார் மாவட்ட மீனவ சங்க தலைவர் முகமது ஆலம் குற்றம்சாட்டியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று செய்தியாளர்களிடம் முகமது ஆலம் கூறியதாவது: இலங்கையில் மீனவர்களுக்கு டீசல் கிடைக்கவில்லை. மன்னார் மாவட்டத்தில் காற்றாலை மின் திட்டம் அமைப்பது தொடர்பாக இந்திய குழு ஒன்று ஆய்வு செய்துவிட்டு திரும்பி உள்ளது.
இலங்கைக்கான எரிபொருட்களை இந்தியா வழங்கக் கூடிய நிலையில் இல்லை. ஆனால் இலங்கையின் வடக்குப் பகுதியில் உள்ள அனைத்து வளங்களையும் பயன்படுத்தும் வகையில் இந்தியா செயற்பட்டு வருகிறது.
முடங்கியது இலங்கை- பொதுமக்களுக்கு 2 வாரத்துக்கு பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய அதிரடி தடை அமல்!
இலங்கையில் உள்ள வளங்களை இலங்கை அரசு முறையாக பயன்படுத்த வேண்டும். ஆனால் எப்படி பயன்படுத்துவது என தெரியாமல் இருக்கிறது இலங்கை அரசு. இதனால் இலங்கை வறுமை நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இலங்கையின் ஒவ்வொரு பகுதியையும் கூறு போட்டு அரசாங்கம் விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் அதானி குழுமத்தின் துறைமுகங்களுக்கு கடும் எதிர்ப்பு உள்ளது. ஆனால் இலங்கையில் கால் பதிக்கிறது அதானி குழுமம். இலங்கையின் வடக்குப் பகுதியை அதானி குழுமத்துக்கு விற்பனை செய்ய இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. இதனை நாம் ஏற்க முடியாது. இவ்வாறு ஈழத் தமிழ் மீனவர் அமைப்பினர் தெரிவித்தனர்.