வெளிநாடு வாழ் இலங்கையர்களுக்கு இரட்டை குடியுரிமை! 10 நாடுகளுக்கு அனுமதி
கொழும்பு: அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட 10 நாடுகளில் வசிக்கும் இலங்கை நாட்டவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இலங்கை நாட்டை சேர்ந்தவர்கள் பலரும் வெளிநாடுகளில் வசிக்கிறார்கள். அவர்கள் இலங்கைக்கு வர விரும்பினால் இலங்கை அரசு குடியுரிமை வழங்கும். இதன் மூலம் அவர்கள் இரண்டு நாடுகளின் குடியுரிமை பெற்ற குடிமக்களாக மாறுவார்கள்.
அதேபோல வேறு நாட்டை சேர்ந்தவர்களுக்கு இலங்கை குடியுரிமை வேண்டும் என்று விண்ணப்பித்தாலும் அவர்களுக்கும் குடியுரிமை வழங்கப்படும். முதல் ஐந்தாண்டு காலத்திற்கு விசா வழங்கப்பட்டு, அவர்கள் நல்ல குடிமக்களாக நடக்கிறார்களா என்பதை பார்த்த பிறகே குடியுரிமை வழங்கப்படும். மேலும், குடியுரிமை கேட்போர் இதற்காக அமைக்கப்பட்டுள்ள கமிட்டியின் முன்னிலையில் நேர்முக தேர்வுக்கு ஆஜராக வேண்டும்.
அமெரிக்கா, கனடா, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, நார்வே, இத்தாலி, சுவீடன் ஆகிய நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பிற நாட்டவர்களுக்கு வழங்குவதில் நடைமுறை சிக்கல் உள்ளதால் இந்த பத்து நாடுகளில் வசிப்போருக்கு மட்டுமே இரட்டை குடியுரிமை வசதியை பெற முடியும்.
2011ல் இந்த நடைமுறை நிறுத்தப்பட்டு தற்போது மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 31ம்தேதி முதல் இதற்கான பணிகள் துவங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.