இலங்கைக்கான அமெரிக்காவின் தூதராக 'இந்திய வம்சாவளி' அதுல் கேஷப் பதவியேற்பு!
வாஷிங்டன்: இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கான அமெரிக்காவின் தூதராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அதுல் கேஷப் பதவியேற்றுக் கொண்டுள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் வரும் 17-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே, தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் இலங்கைக்கான அமெரிக்காவின் தூதராக 44 வயதாகும் அதுல் கேஷப் வாஷிங்டனில் பதவியேற்றுக் கொண்டார். அவர் டெல்லியில் உள்ள அமெரிக்கா தூதரகத்தில் பணியாற்றியவர்.

மாலத்தீவுகளுக்கான அமெரிக்காவின் தூதராகவும் அதுல் கேஷப் பொறுப்பு வகிப்பார். இதற்கு முன்னர் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துறையின் துணை செயலராக பணியாற்றிய நிலையில் இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கு அதுல் கேஷப் பல முறை பயணம் மேற்கொண்டவர்.
தெற்காசிய நாடுகளில் தூதராக நியமிக்கப்படும் 2வது இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் அதுல் கேஷப். இந்தியாவுக்கான அமெரிக்கா தூதராக அண்மையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிச்சார்ட் ராகுல் வெர்மா நியமிக்கப்பட்டிருந்தார். அவரைத் தொடர்ந்து மற்றொரு இந்திய வம்சாவளி அமெரிக்கரான அதுல் கேஷப் , இலங்கை தூதராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இருவருமே பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கெசாப்பின் தந்தை கெசாப் சந்தர் சென், ஐ.நா. அதிகாரியாக பணியாற்றியவர். அவரது தாயார் ஜோயி கால்வெர்ட், அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அதிகாரியாக பணியாற்றியவர். அவரும் இந்தியாவில் அமெரிக்கா தூதரகத்தில் பணிபுரிந்திருக்கிறார்.
இலங்கைக்கான தூதராக அதுல் கேஷப் பதவியேற்ற நிகழ்வில், அமெரிக்காவுக்கான இலங்கை தூதர் பிரசாத் கரியவசம், ஐ.நா.வுக்கான மாலத்தீவின் துணை நிரந்தர பிரதிநிதி ஜெஃப் வகீத் மற்றும் ஏராளமான இந்திய வம்சாவளியினர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications