இலங்கையின் பதுளை மாவட்டத்தில் மீண்டும் பயங்கர நிலச்சரிவு: 7 பேர் சாவு, பலர் மாயம்
கொழும்பு: இலங்கையின் பதுளை பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள கல்கந்தை, ரில்பொல மற்றும் ஹேகொட ஆகிய பிரதேசங்களில் இன்று திடீரென மண் சரிவுகள் ஏற்பட்டன. இதில் அப்பகுதியில் வசித்த பலரும் மண்ணுக்குள் புதையுண்டுள்ளனர்.
இதுவரை 7 பேர் உயிரிழந்திருந்துள்ளதாக உறுதி செய்யப்பட்ட நிலையில் மேலும் பலரை காணவில்லை என்பதால், இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
மழை பொழிவு காரணமாக, பதுளை உள்ளிட்ட மலையோர மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக வானிலை இலாகா சில தினங்கள் முன்பு எச்சரித்திருந்தது. இருப்பினும் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் இந்த விபத்தில் மக்கள் சிக்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கல்கந்தை பிரதேசத்தில் இரண்டு பேரும் ஹேகொடை பிரதேசத்தில் இரண்டு பேரும் மற்றும் ரில்பொல பிரதேசத்தில் மூன்று பேரும் உயிரிழந்துள்ளதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. மீட்பு பணியில் ராணுவம், பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
பதுளை மாவட்டத்தில் இரு மாதங்கள் முன்பு நிகழ்ந்த நிலச்சரிவில் 35க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.