அய்யய்யோ விடுதலைப் புலிகளின் கொடி ஏற்றப் போறாங்க... அலறும் மகிந்த ராஜபக்சே
கொழும்பு: மாவீரர் நாளை முன்னிட்டு ஈழத் தமிழரின் தாயக பிரதேசங்களில் ஒன்றான வடக்கு மாகாணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடிகள் ஏற்ற திட்டமிட்டுள்ளனர்; இதற்கு அரசு தடை விதிக்க வேண்டும் என்று இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே வலியுறுத்தியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் நவம்பர் 26. அதற்கு அடுத்த நாள் நவம்பர் 27-ந் தேதி தமிழீழ விடுதலைக்காக போராடி உயிர் நீத்த போராளிகளின் நினைவாக மாவீரர் நாள் அனுசரிக்கப்படுவது வழக்கம்.
2009ஆம் ஆண்டுக்கு முன்னர் வரை இந்த மாவீரர் நாளின் போது பிரபாகரன் உரையாற்றுவது வழக்கம். இந்த உரையில் விடுதலைப் புலிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த அறிவிப்புகள் இடம்பெறும் என்பதால் உலகம் மிக உன்னிப்பாக கவனித்து வரும்.
இந்நிலையில் மாவீரர் நாளையொட்டி தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடி வடக்கு மாகாணத்தில் ஏற்றப்பட இருக்கிறது; என்னுடைய ஆட்சிக் காலத்தில் இதற்கு தடை விதித்திருந்தேன்; இப்போதும் தடை விதிக்க வேண்டும் என்று இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே வலியுறுத்தியுள்ளார்.
வடக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகள் கொடி ஏற்றப்பட்டால் விடுதலைப் புலிகள் முன்பாக மண்டியிடுவதற்கு சமம் என்றும் கூறியுள்ளார் மகிந்த ராஜபக்சே.