கச்சத்தீவில் நுழைய முயன்றால் கைது: தமிழக மீனவர்களுக்கு இலங்கை ராணுவம் எச்சரிக்கை
கொழும்பு: கச்சத்தீவு பகுதிக்குள் நுழைய முயற்சிக்கும் தமிழக மீனவர்களைக் கைது செய்ய இலங்கை கடற்படை தயார்நிலையில் உள்ளதாக அந்நாட்டு ராணுவ செய்தித்தொடர்பாளர் ருவான் வணிகசூரிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கச்சத்தீவு பகுதிக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் அடிக்கடி நடந்து வருகிறது.
இதனை கண்டிக்கும் வகையில், ஆகஸ்ட் 2ம் நாள் படகில் வெள்ளைக்கொடி கட்டிக்கொண்டு கச்சத்தீவை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்நிலையில், இலங்கை கடல் எல்லைக்குள் நுழைய முயற்சிக்கும் தமிழக மீனவர்களின் போராட்டம் தடுத்து நிறுத்தப்படும் என்று இலங்கை ராணுவ செய்தித்தொடர்பாளர் ருவான் வணிக சூரிய தெரிவித்துள்ளார்.
இதற்காக கடல் எல்லையில் இலங்கை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்திய மீனவர்கள் கச்சத்தீவை முற்றுகையிடுவது தொடர்பாக எச்சரிப்பது புதிதல்ல என்று தெரிவித்துள்ள வணிக சூரிய, நாள்தோறும் சர்வதேச கடல் எல்லையை மீறுவது இந்திய மீனவர்களுக்கு வாடிக்கையாகிவிட்டதாக கூறினார்.