தமிழக மீனவர்களை 75 நிமிடம் கூட அனுமதிக்க முடியாது: இலங்கை அமைச்சர் மகிந்த அமரவீர கொக்கரிப்பு
கொழும்பு: தமிழக மீனவர்களை 75 நிமிடம் கூட தங்களது நாட்டு கடற்பரப்பில் அனுமதிக்க முடியாது என்று இலங்கை அமைச்சர் மகிந்த அமரவீர ஆணவமாக தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண படகுகளுக்கு இலங்கை லைசென்ஸ் வழங்குவது, ஆண்டுக்கு 75 நாட்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதிப்பது உள்ளிட்ட அம்சங்கள் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஆனால் இதை இலங்கை அரசு நிராகரித்துள்ளது. இது தொடர்பாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர கூறியுள்ளதாவது:
தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு எக்காரணம் கொண்டும் இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்காது. ஆண்டுக்கு 75 நாட்கள் இலங்கை கடற்பரப்புக்குள் மீன்பிடிப்பதற்கு தமிழக மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என கூறிவருவது வதந்தி. அப்படி 75 நாட்கள் அல்ல 75 நிமிடங்கள் கூட தமிழக மீனவர்களை அனுமதிக்க முடியாது.
அத்துமீறும் தமிழக மீனவர்களை கைதுசெய்வதற்கு நாங்கள் நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். அப்படி கைது செய்யப்படுகிற மீனவர்களின் படகுகள், வலைகளை ஒருபோதும் திருப்பித்தரமாட்டோம்.
இவ்வாறு மகிந்த அமரவீர கூறியுள்ளார்.