ப்ளீஸ் அப்பாவை சுடாதீர்கள் என கதறிய மகன்: ஐ.நா. மன்றத்தில் அழுத தமிழ் பெண்
கொழும்பு: கொழும்பில் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட தனது கணவரை சுட வேண்டாம் என தனது மகன் கதறி அழுததாக இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் சுனிதா ராஜ் ஐ.நா. மன்றத்தில் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் ஐ.நா. மன்றத்தில் ஆஜராகி தனது கணவரை தேடிப் பிடித்து கொடுக்குமாறும், தனக்கு நீதி பெற்றுத் தருமாறும் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில்,
கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ம் தேதி அதிரடிப் படையினரால் எனது கணவர் கைது செய்யப்பட்டார். அவர் மூன்று மாதம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். பின்னர் விடுதலையான அதே நாளில் ராணுவ சீருடை அணிந்த நபர்களால் கடத்தப்பட்டார்.
சோஷியாலஜி படித்துள்ள அவர் ஜாப்னா பல்கலைக்கழகத்தில் பகுதிநேர ஆசிரியராக பணியாற்றி வந்தார். மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்தி மையத்தில் புரோகிராம் மேனேஜராக இருந்தார். 2009ம் ஆண்டு மே மாதம் 7ம் தேதி அவர் ரிலீஸான அன்று என் கண் முன்பும், என் 3 குழந்தைகளின் கண் முன்பும் ராணுவத்தாரால் கடத்திச் செல்லப்பட்டார்.
கடத்துகையில் என் மூத்த மகன் ராணுவத்தாரை பார்த்து என் அப்பாவை சுட்டுவிடாதீர்கள், எங்களுக்கு அவர் வேண்டும் என்று கூறி கதறி அழுதான். என் கணவர் எங்கு இருக்கிறார் என்ன என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. அவரை எப்படி கொடுமைப்படுத்துகிறார்களோ.
நான் சிறிய நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறேன். நான் தினமும் 18 மணிநேரம் உழைத்தாலும் கணவரின் நினைவு என்னை வாட்டுகிறது. பள்ளியில் படிக்கும் என் குழந்தைகள் பரிசு பெறுகையில் நான் தனியாக செல்வதால் பிற குழந்தைகள் அவர்களிடம் உங்கள் அம்மா, அப்பா பிரிந்துவிட்டார்களா என்று கேட்கிறார்கள். என் கணவரை தேடிக் கண்டுபிடித்து கொடுங்கள். நியாயம் பெற்றுக் கொடுங்கள் என்றார்.












Click it and Unblock the Notifications