மோடி, ஜெ.க்கு எதிராக ராஜபக்சே ஆதரவாளர்கள் போராட்டம்! ஜெ. உருவபொம்மை எரிப்பு!!
கொழும்பு: ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் தலையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை அதிபர் ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் இன்று கொழும்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் .இந்த போராட்டத்தின் போது தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உருவபொம்மையை எரிக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவுக்கு டெல்லி வந்திருந்த ராஜபக்சேவிடம், மீனவர்கள் விவகாரம்; ஈழத் தமிழர் பிரச்சனையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று இந்தியத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் இதை ராஜபக்சே எதிர்பார்க்கவில்லை என்று தெரிகிறது.
இதேபோல் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்த முதல்வர் ஜெயலலிதா, இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்தது. இலங்கைக்கு எதிராக இந்திய அரசு தீர்மானம் கொண்டுவர வேண்டும்; தமிழீழம் தொடர்பாக பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இதனால் தொடர்ந்து இந்திய அரசுக்கு எதிராகவும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராகவும் இலங்கை அமைச்சர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இலங்கை விவகாரங்களில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதா தலையிடக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் முன்பாக ராஜபக்சே ஆதரவாளர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஜாதிக சன்விதானா ஏகமுதுவா என்ற அமைப்பின் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அத்துடன் முதல்வர் ஜெயலலிதாவின் உருவபொம்மையையும் எரித்து ராஜபக்சே ஆதரவாளர்கள் வெறியாட்டம் போட்டனர்.