இலங்கை வட மாகாணத்தைப் பார்வையிட மன்மோகன்சிங்குக்கு முதல்வர் விக்னேஷ்வரன் கடிதம்

பிரதமர் மன்மோகன்சிங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில், நீண்ட காலத்துக்குப் பின்னர் நடைபெற்ற வடக்கு மாகா சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வென்று மாகாணசபையைத் தன்வசப்படுத்தியுள்ளது. இந்நிலையில், மாகாண சபையின் முதல் அமர்வு நடைபெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கின்றது. இந்நிலைமையை உருவாக்கியதில் இந்தியாவின் பெரும் பங்குண்டு என்பதை நாம் மறக்கமாட்டோம்.
வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு இலங்கை அரசுக்கு இந்திய அரசு தொடர்ந்து அழுத்தங்களை கொடுத்தது. தங்கள் அழுத்தங்களின் பின்னணியில் தான் வடக்கு மாகாணசபைத் தேர்தலை இலங்கை அரசு நடத்தியது. எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பிலும், வடக்கு மாகாண மக்கள் சார்பிலும் தங்களுக்கு நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கின்றேன்.
அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து என்னைச் சந்தித்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், டெல்லிக்கு என்னை வருமாறு அழைப்பு விடுத்தார். மிக்க நன்றி. நான் விரைவில் டெல்லி வந்து தங்களைச் சந்திப்பேன்.
இந்தியப் பிரதமர் என்ற வகையில் தாங்களும் வடக்கு மாகாணத்துக்கு வந்து இங்குள்ள நிலைமைகளைப் பார்வையிடுமாறு வேண்டிக் கொள்கின்றேன். இதை எமது வடக்கு மக்களும் விரும்புகின்றார்கள்' என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாடு பற்றி இக்கடிதத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிப்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கெனவே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications