கேமரூன் எச்சரிக்கை எதிரொலி: போர் சேதாரக் கணக்கெடுப்பு தொடக்கம் - இலங்கை அறிவிப்பு
கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் சிக்கி பலியானவர்களின் விவரம் மற்றும் சொத்துக்களின் சேதாரம் குறித்து இன்று முதல் கணக்கெடுப்பைத் தொடங்க இருப்பதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் இக்கிலாந்துப் பிரதமர் டேவிட் கேமரூன் கலந்து கொண்டார். அப்போது அவர், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்குள்ள தழிழர்களின் நிலை பற்றி நேரில் விசாரணை மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போர் குறித்து சுதந்திரமான, நியாயமான விசாரணை வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதற்காக இலங்கைக்கு அவர் கெடு விதித்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இலங்கை அரசு அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், அங்கு நடைபெற்ற உள்நாட்டுப் போரின் சேதார விவரங்கள் குறித்து இன்று முதல் கணக்கெடுப்பைத் தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து மேலும், அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது....
புகார்....
இதுவரை தமிழர்கள் மற்றும் இலங்கை ராணுவ வீரர்கள் என மொத்தம் 5 ஆயிரம் பேரை காணவில்லை என்று போர் காலத்தின் போது காணாமல் போன நபர்கள் தொடர்பாக விசாரணை நடத்த அரசு அமைத்த 3 நபர் கமிஷனிடம் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது.
28ம் தேதி முதல்....
1983-ம் ஆண்டிலிருந்து மே-2009 வரை ஏற்பட்ட மொத்த உயிர் இழப்புகள்,உடைமை மற்றும் சொத்து இழப்புகள் தொடர்பாக நாளை(28-ம் தேதி) முதல் நாடெங்கிலும் உள்ள 14 ஆயிரம் கிராமங்களில் பொது கணக்கெடுப்பு நடத்தப்படும்.
சேதார விபரம்....
போரின் போது மரணம் அடைந்தவர்கள்,உடல் உறுப்புகளை இழந்தவர்கள்,காயம் அடைந்தவர்கள்,சொத்துகளை இழந்தவர்கள் தொடர்பான் விபரங்கள் இந்த கணக்கெடுப்பின் மூலம் சேகரிக்கப்படும்.
6 மாத கால அவகாசம்....
இந்த கணக்கெடுப்பை நிறைவு செய்ய 6 மாத கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது' என இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.