இலங்கை: இயற்கை பேரிடரால் 26 ஆயிரம் மாணவர்களின் புத்தகங்கள், சீருடைகள் இழப்பு
இலங்கையில் உள்ள சபரகமுவ மாகாணத்தில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தத்தில் 26 ஆயிரம் மாணவர்கள் தங்களின் கற்றல் உபகரணங்களையும் , சீருடைகளையும் இழந்துள்ளனர்.
அண்மைய வெள்ளம் மண்சரிவு அனர்த்தங்களினால் சபரகமுவ மாகாணத்தில் 26 ஆயிரம் மாணவர்களின் பாடப்புத்தகங்கள், சீருடைகள் போன்றவை அழிவடைந்துள்ளதாக மாகாண கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள், அப்பியாசப் புத்தகங்கள், புத்தகப் பைகள், கற்றல் உபகரணங்கள் என்பவற்றுடன், தண்ணீர் கொண்டு செல்லும் போத்தல்கள், காலணிகள், பாடசாலை சீருடைகள் என்பன தேவைப்படுவதாக சபரகமுவ மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் மகிந்த எஸ்.வீரசூரிய கூறியுள்ளார்.
ரத்தினபுரி, நிவித்திகல, தெஹியோவிட்ட ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இழப்புகள் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கீட்டைச் சீர் செய்வதற்காக உளவியல் ரீதியான ஆற்றுப்படுத்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.
சபரகமுவ மாகாணத்தில் வெள்ளத்தினாலும், மண்சரிவினாலும் 19 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இங்கு 81 பாடசாலைகள் முற்றாக சேதமடைந்திருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
கல்வித்துறைக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை ஈடு செய்வதற்குரிய 530 மில்லியன் நிதியை வழங்குமாறு திறைசேரியிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருப்பதாக மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மகிந்த எஸ்.வீரசூரிய தெரிவித்துள்ளார்.
தொடர்பான செய்திகள்:
இலங்கை வெள்ளம், நிலச்சரிவு பலி எண்ணிக்கை 212
இலங்கை: வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் 79 பேரை காணவில்லை