இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் மூலம் அரசியலில் மீண்டும் விஸ்வரூமபெடுக்கிறார் மகிந்த ராஜபக்சே?
கொழும்பு: இலங்கை அரசியலில் கடந்த 6 மாதங்களாக ஒதுங்கியிருக்கும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே மீண்டும் தலையெடுப்பதற்கான அத்தனை வியூகங்களும் வகுக்கப்பட்டு வருகின்றன. இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் ராஜபக்சே மீண்டும் வருவது தவிர்க்க முடியாத ஒன்று என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் மகிந்த ராஜபக்சே தோல்வி அடைந்ததுடன் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருந்தார். ஆனால் ராஜபக்சேவை எதிர்த்துப் போட்டியிட்டு வென்ற அவரது கட்சியைச் சேர்ந்த சிறிசேன, எதிர்க்கட்சியான ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசை அமைத்தார்; ரணிலை பிரதமராக்கினார்.
இருந்தபோதும் இலங்கையில் ஒரு வலுவான, நிலையான நம்பிக்கையான அரசாங்கத்தை சிறிசேனா-ரணில் விக்கிரமசிங்கே அரசாங்கத்தால் தர முடியவில்லை என்றே கூறப்படுகிறது. இதனிடையே ஜனாதிபதியின் அதிகாரத்தைக் குறைத்து நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் அளிக்கும் அரசியல்சாசன திருத்தத்தையும் சிறிசேன கொண்டு வந்து பார்த்தார். ராஜபக்சே குடும்பத்தினர் மீது ஊழல் வழக்குகள் பாய்ந்தது. மகிந்தவின் சகோதரர் பசில் ராஜபக்சே சிறைக்கும் கூட அனுப்பப்பட்டார்.
சமாதானம் பேசும் சிறிசேன
ஆனாலும் ராஜபக்சேவும் அவரது ஆதரவாளர்களும் இன்னமும் அசந்துபோய்விடவில்லை என்றே தென்னிலங்கை வட்டாரங்கள் கூறுகின்றன. இதனால்தான் சிறிசேனவும் கூட ராஜபக்சேவுடன் 'சமாதானமாக' போவதில் மும்முரம் காட்டி வருகிறார்.
இந்த நிலையில்தான் இலங்கை நாடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் வர இருக்கிறது. ஏற்கெனவே நடந்த அதிபர் தேர்தலில் சிங்களர் அதிகம் வாழும் தென்னிலங்கையில் மகிந்த ராஜபக்சேதான் அதிக வாக்குகளைப் பெற்றிருந்தார். தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகளில்தான் சிறிசேனவால் வெல்லவே முடிந்தது என்பது நிதர்சனம்.
சிங்களர் செல்வாக்கு
சிங்களர் மத்தியில் இன்னமும் ராஜபக்சேவுக்கான செல்வாக்கு குறைந்துபோய்விடவில்லை என்பதை சிறிசேனவும் உணர்ந்துதான் பொதுத்தேர்தலுக்கு முன்னதாகவே ராஜபக்சேவுடன் சமாதானமாகப் போய்விடுவது என்ற முடிவுக்கும் வந்திருக்கிறார். இதை தங்களுக்கு சாதகமாகப் பார்க்கும் ராஜபக்சே தரப்பு, சிறிசேனவுக்கு அடுத்தடுத்து நிபந்தனைகளை விதித்து வருகிறது.
நிபந்தனைகள்...
அதாவது ராஜபக்சே குடும்பத்தினர் மீதான வழக்குகளைக் கைவிடுவது; ராஜபக்சேவை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது; ரணில் கட்சியுடனான உறவை முறித்துக் கொள்வது ஆகியவைதான் ராஜபக்சே தரப்பு விதிக்கும் நிபந்தனைகள்.
தாவும் சிறிசேன ஆதரவாளர்கள்
சிறிசேனவும் ராஜபக்சேவின் சுதந்திரா கட்சியைச் சேர்ந்தவர்தான் என்ற போதிலும் அதிபர் தேர்தலின் போது சொந்த கட்சியில் இருந்த ஆதரவு தற்போது அவருக்கு இல்லை என்றே கூறப்படுகிறது; பெரும்பான்மையான சுதந்திர கட்சி எம்.பி.க்கள் ராஜபக்சேவை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தினால் சிங்களர் வாக்குகளை அள்ளிவிட முடியும்; மீண்டும் எம்.பி., அமைச்சராகிவிடலாம் என்பது பலரது கனவு.
இதனால்தான் சிறிசேனவின் ஆதரவாளர்களாக காட்டிக் கொண்ட பலரும்கூட ராஜபக்சே முகாமுக்கு தாவ நினைக்கிறார்கள்.. ராஜபக்சேவும் கூட சிறிசேன- ரணில் கூட்டு அரசாங்கத்தின் பலவீனத்தை தமக்கு சாதகமாக்கிக் கொண்டு, தேசத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது; இதோ தமிழர் பகுதியில் புலிக் கொடி பறக்கிறது; அதோ விடுதலைப் புலிகள் வந்து கொண்டிருக்கிறார்கள்.. என்கிற கோஷத்தை மெல்ல மெல்ல முன்வைத்தும் வருகிறார்...
புலி பீதி
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமே இல்லை என்ற போதும் தென்னிலங்கை சிங்களர் மத்தியில் புலிகள் மீதான 30 ஆண்டுகால அச்சம் இன்னமும் அகன்றுவிடவில்லை; இது ஒன்றே தமக்கான அறுவடை என்பது ராஜபக்சேவின் திட்டம்.. இதனால் எப்படியும் நாடாளுமன்றத்தின் மூலம் மீண்டும் அதிகாரத்தைப் பெற்று இலங்கையின் அசைக்க முடியாத அரசியல் பெரும் சக்தியாக தம்மை நிலைநிறுத்துவது என்பதில் ராஜபக்சே படுமும்முரமாக இருக்கிறார் என்கிறது இலங்கை தகவல்கள்...