அமைதியாக நடந்து முடிந்தது இலங்கை நாடாளுமன்ற தேர்தல்! இன்றே வாக்கு எண்ணிக்கை
கொழும்பு: இலங்கையின் 15வது பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையில் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது. இன்று மாலை 6 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. தபால் வாக்குகள் எண்ணப்பட்டு இரவு முடிவுகள் வெளியாகும் நிலையில், வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நிலவரம் நாளை பகலுக்குள் தெரியவரும்.
இலங்கை 1947ம் ஆண்டு சுதந்திரம் பெற்றதைத் தொடர்ந்து 15வது பொதுத் தேர்தல் இன்று நடைபெற்றது. நாடாளுமன்றத்திற்கு 196 பிரதிநிதிகளை நேரடியாகத் தேர்வு செய்வதற்காக (மொத்த பிரதிநிதிகள் எண்ணிக்கை 225) இன்று தேர்தல் நடத்தப்பட்டது. இதில் நாடு முழுவதிலுமுள்ள ஒரு கோடியே 50 லட்சத்து 44 ஆயிரத்து 490 பேர் வாக்களிக்க தகுதியுடையவர்களாக இருந்தனர்.
இத்தேர்தலில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான ஐக்கிய தேசிய நல்லாட்சி முன்னணிக்கும், அதிபர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஜனதா விமுக்தி பெரமுனா ஆகியவை தனித்து போட்டியிட்டன. ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணி சார்பில்தான் முன்னாள் அதிபர், ராஜபக்சே போட்டியிட்டார்.
இதையொட்டி, சர்வதேச நாடுகளைச் சேர்ந்த 163 தேர்தல் பார்வையாளர்கள், இலங்கை தேர்தலை கண்காணிக்க வந்திருந்தனர்.
வீண் சிரமங்களை தவிர்க்கும் வகையில் நேர காலத்துடன் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிப்பதன் மூலம் வாக்காளர்கள் தமது ஜனநாயக உரிமையை பயன்படுத்த வேண்டுமென தேர்தல் ஆணையர் மஹிந்த தேசப்பிரிய வேண்டுகோள் விடுத்திருந்தார்.
பொது தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு கடுமையாகப் பலப்படுத்தப்பட்டிருப்பதாக போலீஸ் செய்தி தொடர்பாளர் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்திருந்தார்.
தேர்தல் ஆரம்பிக்கப்படுவது முதல் முடிவுகள் வெளிவரும் வரை தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறும் வேட்பாளர்கள். ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் மீது சூழ்நிலைக்கேற்ப பொலீஸ் அதிகாரம் பயன்படுத்தப்படுமென்றும், தேவையேற்பட்டால் வன்முறைகளுக்கு காரணமானவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தவும் பின்வாங்க மாட்டோம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
கடுமையான நடவடிக்கைகள் காரணமாக வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. ஒரு சில சிறு சம்பவங்களை தவிர்த்து வாக்குப்பதிவு சுமூகமாக நடந்துள்ளது. இத்தேர்தலில், சுமார் 75 சதவீதத்துக்கும் அதிக வாக்குப்பதிவு நடந்திருக்கும் என்று கணிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழர் பகுதிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது.
பிரதமர் ரணில்விக்ரமசிங்கே, பிரதமர் பதவிக்கான போட்டியிலுள்ள முன்னாள் அதிபர் ராஜபக்சே போன்றோரும் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். இருவருமே, தங்கள் கட்சிக்குதான் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக தெரிவித்திருந்தனர்.
இதனிடையே இன்று மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு இரவு 11 மணிக்கு மேல், ரிசல்ட் அறிவிக்கப்படுகிறது. நாளை மதியத்திற்குள், வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.