ராமர் பாலம், பருத்தித்துறையில் சீனா தூதர் ஆய்வு இந்தியாவுக்கு அச்சுறுத்தல்-தமிழ் அரசியல் கட்சி பகீர்
முல்லைத் தீவு: இலங்கையின் பருத்தித்துறை துறைமுகம் மற்றும் மன்னார் வளைகுடாவில் ராமர் பாலத்தை இலங்கைக்கான சீனாவின் தூதர் ஆய்வு செய்திருப்பது இந்தியாவுக்கான பகிரங்க அச்சுறுத்தல்தான்; ஈழத் தமிழர்களுக்கான அபிவிருத்தி நடவடிக்கை அல்ல என்று ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் கதிர் குற்றம்சாட்டியுள்ளார்.
Recommended Video
முல்லைத்தீவில் நேற்று செய்தியாளர்களிடம் கதிர் கூறியதாவது: வடக்கு மாகாணத்தில் சீனாவின் தூதர் வருகை தந்திருப்பது குறித்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மக்களின் கருத்துகளை தெரிந்து கொள்ள வேண்டும்.
இலங்கை மீது சீனா ஒரு சத்தமே இல்லாத யுத்தத்தை நடத்தி வருகிறது. தமிழர்களின் தாயக நிலப்பரப்பான இலங்கையின் வடக்கு, கிழக்கு நிலப்பகுதிகளில் இது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது. தமிழர்களின் தாயக நிலமான வடக்கு மாகாணத்தை சீனா கைப்பற்ற நினைக்கிறது. இதற்கு இலங்கை அமைச்சர்களாக இருக்கும் தமிழ் அரசியல் கட்சிகள் உடந்தையாக இருக்கின்றன.

சீனாவின் அடிமை நாடுகள்
வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதாக கூறிக் கொண்டு சீனா மூக்கை நுழைத்த எந்த நாடும் வளர்ந்ததாக வரலாறு எதுவும் கிடையாது. ஆனால் அந்த நாடுகள் பொருளாதார ரீதியாக சீனாவுக்கு அடிமைப்பட்டுதான் கிடக்கின்றன. இலங்கையும் இந்த பட்டியலில் இணைந்து சீனாவுக்கு அடிமையாகி நிற்கிறது.

இந்தியாவுக்கான அச்சுறுத்தல்
யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களில் மிக முக்கியமான பருத்தித்துறை, ராமர் பாலம் ஆகியவற்றைப் பார்வையிட்டிருக்கிறார் சீனா தூதர். யாழ்ப்பாண நூலகத்தையும் பார்வையிட்டிருக்கிறார். இந்தியாவின் வேதாரண்யத்துக்கு அருகேதான் பருத்தித்துறை துறைமுகம் இருக்கிறது. தமிழர்களுக்கு வளர்ச்சித் திட்டங்களை தருவதாக சொல்லுகிற சீனா தூதர், இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார். இது தொடர்பாக தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள் அமைதியாக இருக்கக் கூடாது.

இந்தியாவின் ஆதரவு தேவை
இலங்கை தமிழர்களுக்கு இந்தியாவின் ஆதரவு அவசியமானது. இந்தியாவின் ஆதரவு தொடர்ந்து இலங்கை தமிழருக்கு தேவைப்படுகிறது. ஆனால் இந்தியாவுடனான ஈழத் தமிழர் உறவையே சீர்குலைக்கும் சதிவேலைகள் நடக்கின்றன. இலங்கை அமைச்சராக இருக்கிற டக்ளஸ் தேவானந்தாதான் சீனா தூதரை யாழ்ப்பாணத்துக்கும் மன்னாருக்கும் கொண்டுவந்திருக்கிறார். சீனாவுடன் முழுமையாக டக்ளஸ் தேவானந்தா செயல்பட்டு வருகிறார்.

சீனாவிடம் சிக்க வைக்கப்படுகிறோம்
இலங்கையில் கடற்கரை சமூகத்தினரை சீனாவுக்குள் சிக்க வைக்கிற மிக ஆபத்தான் நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. சீனாவின் தயவு தமிழருக்கு தேவை இல்லை. நம்முடைய வளத்தை நாமே பலமடங்கு பெருக்க நடவடிக்கை எடுத்தாக வேண்டும். இதற்காக சுயமாக சிந்திக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இவ்வாறு கதிர் கூறினார்.












Click it and Unblock the Notifications