தமிழக- இலங்கை மீனவர்களிடையேயான நாளைய கொழும்பு பேச்சுவார்த்தை ரத்து!!
கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்பில் நாளை நடைபெறுவதாக இருந்த தமிழக மீனவர்களுடனான பேச்சுவார்த்தை நடைபெறாது என்று அந்நாட்டு மீன்பிடித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சகத்தின் அதிகாரி தங்கவேல் சதாசிவம் கூறியதாவது:
இந்திய அரசுத் தரப்பில் கேட்டுக்கொண்டபடி தமிழக மீனவர்களை விடுதலை செய்தோம். ஆனால் கடந்த சில நாட்களில் 74 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் நுழைந்ததால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை செய்ய கோரப்படுகிறது. இதனை இலங்கை ஏற்கவில்லை.
இந்நிலையில் கொழும்பில் நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையில் பங்கேற்பது குறித்து இந்திய மத்திய அரசோ, தமிழக அரசோ இலங்கையில் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.
இருப்பினும் நாளை காலை பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் இலங்கை அரசு செய்துள்ளது. இந்த பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வோம் அல்லது பங்கேற்க மாட்டோம் என இந்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.
இவ்வாறு தங்கவேல் சதாசிவம் கூறினார். இதனால் நாளைய கொழும்பு பேச்சுவார்த்தைகள் நடைபெறாது என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications