எத்தனை ஜெயாக்கள் வந்தாலும் கச்சதீவை மீட்கவே முடியாது: ராஜபக்சே கட்சி எம்.பி. அஸ்வர் பேச்சு
கொழும்பு: எத்தனை ஜெயலலிதாக்கள் வந்தாலும் இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்கவே முடியாது என்று ராஜபக்சே கட்சியைச் சேர்ந்த எம்.பி. அஸ்வர் கூறியுள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் எம்.பி. அஸ்வர் நேற்று பேசியதாவது:
இந்தியப் பிரதமருடன் ராஜபக்சே என்ன பேசினார் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே கேள்வி எழுப்புகிறார். ஆனால் ஜெயலலிதா மோடியைச் சந்தித்து தனித் தமிழீழம் அமைப்பது குறித்து கூறியிருப்பது பற்றி ஏன் அவர் மெளனம் சாதிக்கிறார்?

இந்திய பிரதமர் மோடியுடனான ராஜபக்சே சந்திப்பின் போது இலங்கையின் இறையாண்மைக்கு மதிப்பளிப்பது என்று இருதரப்பும் உறுதியளித்தனர்.
ஆனால் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் ஜெயலலிதா சந்தித்து பேசுகிற போது தனித் தமிழீழம் பற்றி பேசியிருக்கிறார். இது பற்றி எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே கேள்வி எழுப்பவில்லையே ஏன்?
எங்களைப் பொறுத்தவரை எத்தனை ஜெயலலிதாக்கள் வந்தாலும் இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்கவே முடியாது. மகிந்த ராஜபக்சேவும் நரேந்திர மோடியும் சிறந்த ஜோடிகள், ஜாடிக்கேற்ற மூடிகள்.
இவ்வாறு அஸ்வர் எம்.பி. பேசினார்.












Click it and Unblock the Notifications