இலங்கையில் நாளை அதிபர் தேர்தல்: ராஜபக்சே - மைத்ரிபால சிறிசேன இடையே கடும் போட்டி!
கொழும்பு: இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை நடைபெற உள்ளது. தற்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கும் அவரது முன்னாள் சகாவான எதிர்க் கட்சிகளின் பொதுவேட்பாளரான மைத்ரிபால சிறிசேனவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இலங்கை அதிபராக கடந்த 2005-ம் ஆண்டு ராஜபக்சே பதவி ஏற்றார். 2008-ம் ஆண்டு அவர் விடுதலைப்புலிகளுக்கு எதிராக போர் தொடுத்தார். 2009-ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்தது.
அந்த செல்வாக்கை பயன்படுத்தி, அதிபர் தேர்தலை முன்கூட்டியே அறிவித்தார். 2010-ம் ஆண்டு நடைபெற்ற அத்தேர்தலில் அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவை வீழ்த்தி மீண்டும் அதிபர் ஆனார்.
இரு முறைதான்..
இலங்கை அரசியலமைப்பு சட்டப்படி, ஒருவர் 2 முறை மட்டுமே அதிபர் பதவி வகிக்க முடியும். 3வது முறையாக பதவிக்கு வர விரும்பும் ராஜபக்சே, இந்த சட்டப்பிரிவை திருத்தினார்.
கடும் எதிர்ப்பு
அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட விரும்பும் அவரது நடவடிக்கைக்கு ஆளுங்கூட்டணியிலும் எதிர்ப்பு எழுந்தது. கூட்டணி கட்சிகளும், எம்.பி.க்களும் அடுத்தடுத்து விலகினர்.
நாளை வாக்குப் பதிவு
இதை பொருட்படுத்தாமல், ராஜபக்சே, அதிபர் தேர்தலை மீண்டும் முன்கூட்டியே நடத்த தீர்மானித்தார். அதன்படி, நாளை வாக்குப் பதிவு நடக்கிறது.
த.தே.கூ. ஆதரவு
இந்த தேர்தலில் ராஜபக்சேவின் சுதந்திரா மக்கள் கட்சியின் பொதுச்செயலாளராகவும், சுகாதாரத்துறை அமைச்சராகவும் இருந்த மைத்ரிபாலா சிறிசேனவை எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளராக நிறுத்தி உள்ளன. அவருக்கு தமிழர் தேசிய கூட்டமைப்பும் ஆதரவு தெரிவித்துள்ளது.
தப்பி ஓட ராஜபக்சே திட்டம்?
சிறிசேனவுக்கு ஆதரவாக எம்.பி.க்கள் பலர் அணி மாறி வருவதால், ராஜபக்சேவுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அவர் தோல்வி பயத்தில், நாட்டை விட்டு தப்பிச்செல்ல திட்டமிட்டு இருப்பதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.
தெரிஞ்ச பிசாசு
ராஜபக்சேவும், சிறிசேனவும் பெரும்பான்மை சிங்கள சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் ஆதரவை பெறுபவரே வெற்றி பெற முடியும் என்ற நிலை காணப்படுகிறது. எனவே, தமிழர்களின் வாக்குகளைப் பெற ராஜபக்சே இறங்கி வந்துள்ளார். ‘தெரியாத தேவதையை விட, தெரிந்த பிசாசுக்கே வாக்களியுங்கள்' என்று அவர் கெஞ்சும் பாணியில் தமிழர்களிடம் வாக்கு கேட்டார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது.
வாக்குப் பதிவு- எண்ணிக்கை
நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. நாளை இரவு 8 மணிக்கே வாக்கு எண்ணிக்கை தொடங்கி விடும்.