இலங்கையில் சுஷ்மா ஸ்வராஜ்- அதிபர் சிறிசேன, பிரதமர் ரணிலுடன் சந்திப்பு!
டெல்லி: இலங்கைக்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ள சுஷ்மா ஸ்வராஜ் அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேன, பிரதம ரணில் விக்கிரமசிங்கே ஆகியோரை சந்தித்து உரையாடினார்.
பிரதமர் நரேந்திர மோடி வரும் 13, 14-ந் தேதிகளில் இலங்கை செல்ல இருக்கிறார். இப் பயணத்தின்போது போரால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை பகுதிகளுக்குச் செல்லும் முதல் பிரதமராகவும் மோடி இருப்பார்.

இந்நிலையில் பிரதமர் மோடியின் பயண ஏற்பாடுகள் குறித்து ஆராய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இலங்கை சென்றுள்ளார். கடந்த 2012-ம் ஆண்டில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது சுஷ்மா இலங்கை சென்றார்.
அதற்குப் பின் இப்போதுதான் அவர் அங்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். இப்பயணத்தின் ஒருபகுதியாக இலங்கை அதிபர் சிறிசேனவை நேற்று சுஷ்மா ஸ்வராஜ் சந்தித்து பேசினார்.
இன்று அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரையும் சுஷ்மா ஸ்வராஜ் சந்தித்து பேசினார்.
முன்னதாக கொழும்பில் உள்ள இந்திய அமைதிப் படையினருக்கான நினைவுச் சின்னத்துக்கும் சுஷ்மா மரியாதை செலுத்தினார். 1987ஆம் ஆண்டு இந்தியா- இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு இந்திய அமைதிப் படை அனுப்பப்பட்டது.
ஆனால் அமைதி காக்க சென்ற இந்திய ராணுவத்தினர் பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இந்திய அமைதிப் படைக்கும் யுத்தம் வெடித்தது.

இந்த யுத்தத்தில் ஆயிரக்கணக்கான இந்திய ராணுவத்தினர் உயிரிழந்தனர். அவர்கள் நினைவாக கொழும்பில் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications