பெங்களூர் ஏ.டி.எம். தாக்குதல் ஸ்டைலில் சென்னையில் பெண்ணை தாக்கிய நபர் கைது
சென்னை: பெங்களூர் ஏடிஎம் மையம் தாக்குதல் பாணியில் சென்னையில் பொது விநியோகத் திட்டக் கடையில் பெண்ணிடம் நகை, பணம் பறித்தவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை ஆலந்தூரில் காஞ்சீபுரம் கோஆபரேட்டிவ் சொசைட்டி நடத்தும் பொது வினியோக திட்டக் கடை ஒன்றில் வேலை பார்ப்பவர் கோமதி(38). கடந்த மாதம் 19ம் தேதி மாலை அவர் அருகில் உள்ள டீக்கடையில் டீ குடித்து விட்டு கடைக்கு வந்தார். அப்போது திடீர் என்று இரண்டு பேர் கடைக்குள் நுழைந்து ஷட்டரை மூடினர்.
கத்தியை காட்டி கோமதி அணிந்திருந்த 8 பவுன் நகையை பறித்தனர். மேலும் கடையில் இருந்த ரூ.15,000 ரொக்கத்தையும் திருடிக் கொண்டு கோமதியை தாக்கிவிட்டு ஷட்டரை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். இந்த சம்பவத்தில் காயம் அடைந்து மயங்கிய கோமதி மயக்கம் தெளிந்ததும் தனது முதலாளிக்கு போன் செய்து விவரம் தெரிவித்தார்.
இந்த சம்பவம் பற்றி வழக்குப் பதிவு செய்த போலீசார் கோமதியை தாக்கிய இருவரில் ஒருவரான அன்வருத்தீன்(30) என்பவரை கடந்த திங்கட்கிழமை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் அன்வருத்தீன் கூறுகையில், நான் பொது விநியோகக் கடையில் பொருட்கள் வாங்கி சந்தையில் அதிக விலைக்கு விற்று வந்தேன். ஆனால் திடீர் என்று கோமதி பொருட்கள் தருவதை நிறுத்திவிட்டார். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது என்றார்.












Click it and Unblock the Notifications