காதும் காதும் வச்சா மாதிரி 10 சொகுசு ரேஸ் கார்களும் ரிலீஸ்.. எல்லாம் பெரிய இடமாச்சே!
பணம் இருந்தால் எதுவும் நடக்கும். போலீஸ் மீது காரே ஏற்றினாலும், பணத்தைக் கொடுத்து வெளியே வந்துவிடுவார்கள் சொகுசு கார் ஓட்டும் செல்வந்தர் வீட்டின் செல்லங்கள்.
சென்னை: ஈசிஆரில் பிடிக்கப்பட்ட 10 ரேஸ் சொகுசு கார்களை இரவோடு இரவாக போலீஸார் விடுவித்துள்ளனர். இதற்காக அதிகாரிகள் பெரும் பிரயத்தம் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை ஈசிஆரில் கடந்த சனிக்கிழமை 10 சொகுசு கார்கள் அதிவேகமாக வந்த போது போலீசார் அதனை மறித்துள்ளனர். ஆனால் கார்கள் நிற்காமல் வேகமாக சென்றுள்ளது.
அப்போது, சோதனையில் ஈடுபட்டிருந்த ஆய்வாளர் சவுந்தரராஜன் காலில் காரை ஏற்றிவிட்டு நிற்காமல் சென்றார் செல்வந்த சீமானின் மகன் ஒருவர்.
பிடிக்கப்பட்ட ரேஸ் கார்கள்
இதற்கு பிறகு அடுத்தடுத்து வந்த 10 கார்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர். பிடிப்பட்டவர்கள் அனைவரும் செல்வாக்கு மிக்க குடும்பங்களை சேர்ந்தவர்கள் என்பதால் அதிகாரிகளின் தலையீட்டின் பேரில் உடனடியாக அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
கமுக்கமாக விடுவிப்பு
இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட 10 ரேஸ் கார்களையும் போலீசார் நேற்று நள்ளிரவு விடுவித்துள்ளனர். ஆய்வாளர் சவுந்தரராஜன் காலில் கார் ஏற்றிய அந்த ஒரு காரைக் கூட பிடித்து வைத்துக் கொள்ளாமல் அனைத்து கார்களையும் போலீசார் விடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாரிகளின் தலையீடு
பெரும் செல்வந்தர்களின் புதல்வர்கள் ஓட்டி வந்த கார்கள் பறிமுதல் செய்யப்பட்டதால் பல அதிகாரிகளுக்கு தூக்கம் போய்விட்டதாம். இரவும் பகலுமாக பாடுபட்டு புதல்வர்களை விடுத்தது போன்றே அவர்கள் ஓட்டி வந்த கார்களையும் இரவோடு இரவாக காதும் காதும் வைத்தது போன்று விடுத்துள்ளனர் அதிகாரிகள்.
வருமானவரி நோட்டீஸ்
போலீசார் 10 சொகுசு ரேஸ் கார்களை விடுத்துவிட்டனர். என்றாலும், இந்த வெளிநாட்டு கார்கள் குறித்து விசாரிப்பதற்கு காரின் உரிமையாளர்களுக்கு வருமான வரி துரை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அமலாக்கத் துறை விசாரணை
வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது போன்றே, அமலாக்கத் துறையும் 10 கார்களின் செல்வந்தர்களை விசாரிக்க முடிவு செய்திருக்கிறதாம். பணக்காரர்களுக்கு இதெல்லாம் ஒரு மேட்டரா? அவர்கள் பார்க்காத வருமானவரித் துறையா, அமலாக்கத் துறையா என்று இதனைக் கேள்வி கேட்ட பொதுமக்கள் சிரித்துவிட்டு செல்கிறார்கள்.