நீர் அலைகள் உயிர்களைக் கொத்துக் காத்தாக பறித்த டிசம்பர் 26.... இன்று சுனாமி நினைவு தினம்!
சென்னை: மறக்க முடியாத டிசம்பர் 26 இன்று...தென் கிழக்கு ஆசியாவை சுழற்றிப் போட்டு கடல் அலைகளுக்கு பல லட்சம் உயிர்களை காவு கொடுத்த சுனாமி தாக்கிய தினம் இன்று.
10 வருடங்கள் ஓடி விட்டது சுனாமி தாக்கி. ஆனால் நினைவுகள்தான் இன்னும் சோகத்துடன் சுற்றியடித்துக் கொண்டிருக்கின்றன.
2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி, சுனாமி பேரலை தமிழக கடற்கரையில் நாகப்பட்டினம், கன்னியாகுமரி, கடலூர் கடற்கரை பகுதிகளில் ஆயிரக்கணக்கான மனித உயிர்களை காவு வாங்கியது.
இந்த கோர சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்தாலும் குழந்தைகளை இழந்த பெற்றோருக்கும், பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கும், உற்றார், உறவினர்களை இழந்து தவிக்கும் பொதுமக்களுக்கும் இன்னும் ஆறாத வடுவாகவே இருந்து வருகிறது.
குழந்தைகள், குடும்பத்தினர், உறவினர்கள் ஆகியோரின் நினைவலைகளிலேயே வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருப்போர் ஏராளமானோர். அவர்கள் இந்தநாளில் கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
சென்னை மெரினா, காசிமேடு, பட்டிணப்பாக்கம், திருவான்மியூர் ஆகிய கடற்கரை பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) பல்வேறு அமைப்புகள் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற உள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் பாரதீய ஜனதா கட்சி மீனவரணி சார்பில் சுனாமி அஞ்சலி செலுத்தும் நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அக்கட்சியின் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்கிறார்.
கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தும், கடல் நீரில் பாலை ஊற்றியும் அஞ்சலி செலுத்துகிறார்கள். இது தவிர பல்வேறு அமைப்புகள் சார்பில் அமைதி பேரணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுனாமி என்ற பேரலை வந்து சென்று 10 ஆண்டுகள் நிறைவடைந்தாலும், அதனுடைய நினைவலைகள் மட்டும் மக்களின் மனதில் இருந்து இன்னும் அகலவில்லை. இப்போதும் கடல் கொஞ்சம் சீற்றமாக இருந்தாலும் மக்கள் ஒருவித அச்சத்துடனேயே வாழ்ந்து வருகிறார்கள். இந்த கோரதாண்டவத்திற்கு பிறகு கடல் வளமும் குறைந்து விட்டது. இதனால் முன்பு போல் தொழில் சிறப்பாக இல்லை.
சுனாமியால் சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட 68 பேர் இறந்தனர். இவர்களில் ஒரு சிலருக்கு மட்டும் பெயரளவில் வீடு கட்டி தரப்பட்டது. அந்த வீடுகள் அனைத்தும் தற்போது இடிந்து விழும் நிலையிலும், அதில் வசிப்பவர்கள் ஆபத்தான நிலையில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். எனவே குடிசைமாற்று வாரியம் இந்த இடத்தில் புதிதாக தரமான வீடுகள் கட்டி தர முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை போலவே, நாகை, கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட தமிழக கடலோரப் பகுதிகள் அனைத்துமே சுனாமி பேரலையின் சீற்றத்தைக் கண்டு பயந்து நடுங்கிய தினம் இன்று... அஞ்சலி செலுத்துவோம், கடல் அன்னையின் நாவில் சிக்கி ஜல சமாதியான ஆத்மாக்களுக்கு.