''11 இங்க இருக்கு மீதி 14 எங்க?'': வரிச்சியூர் செல்வத்திடம் விசாரணை– கீரி மணியை 'தோண்ட' முடிவு
மதுரை: மதுரையில் கண்டு எடுக்கப்பட்ட 11 வெடிகுண்டுகள் தொடர்பாகவும் மாயமான 14 வெடிகுண்டுகள் எங்கே பதுக்கி வைக்கப்பட்டுள்ளன என்று வரிச்சியூர் செல்வத்திடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மதுரை அண்ணாநகரில் கடந்த 10ஆம்தேதி குப்பை தொட்டிக்குள் கிடந்த 11 நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டு செயலிழக்க செய்யப்பட்டன. இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குப்பை தொட்டியில் சிக்கிய வெடிகுண்டுகள் பிரபல ரவுடி அப்பள ராஜாவின் முக்கிய கூட்டாளியான பிரவீன் மூலம் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்துக்கு கொடுத்து அனுப்பப்பட்டது என்றும் தெரியவந்தது.
இந்த வெடிகுண்டுகளை முனிச்சாலை பகுதியை சேர்ந்த கீரிமணி கொண்டு வந்தபோது போலீசாரின் கண்காணிப்பு தீவிரம் அடைந்ததால் குப்பை தொட்டிக்குள் குண்டுகளை போட்டுவிட்டு தப்பினார். இது தொடர்பாக அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வரிச்சியூர் செல்வம் உள்ளிட்ட சிலரை தேடி வந்தனர்.
சென்னையிலும் தனிப் படை தங்கி தேடுதல் வேட்டை நடத்தியது. இதற்கிடையில் இவ்வழக்கில் வரிச்சியூர் செல்வம், அவரது கார் டிரைவர் பார்த்திபன் ஆகியோர் மதுரை நீதிமன்றத்திலும், கீரிமணி விழுப்புரம் நீதிமன்றத்திலும் சரணடைந்தனர்.
குண்டுகளை தயாரிக்க வெடிபொருட்கள் வாங்கி கொடுத்ததாக திண்டுக்கல் அருகே உள்ள செம்பட்டியை சேர்ந்த பிஸ்டல் பாண்டியையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் 25 குண்டுகளை பிரவீன் தயாரித்ததாக தெரிவித்தார். ஏற்கனவே 11 குண்டுகள் சிக்கியுள்ள நிலையில் மீதமுள்ள 14 குண்டுகள் எங்கே என்ற மர்மம் நீடித்து வருகிறது.
இது தொடர்பாக வரிச்சியூர் செல்வம் மற்றும் அவரது கார் டிரைவர் பார்த்திபனிடம் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மதுரை மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் மனு செய்தனர். இதையடுத்து 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து கோர்ட்டு உத்தரவிட்டது. அண்ணாநகர் போலீசார் வரிச்சியூர் செல்வம், பார்த்தீபன் ஆகியோரை ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வரிச்சியூர் செல்வத்திடம் விசாரித்த போது, வரிச்சியூரில் பெருசு அழகர் வீடு கட்டி, குடியேறியதுடன் கோயில் விழாக்களிலும் முன் மரியாதை பெற்றதால் தங்களது கவுரவம் பாதித்ததாகவும், இதில் மோதல் ஏற்பட்டு, தன்னை பெருசு அழகர் தாக்கலாம் என்பதால் வெடிகுண்டுகளுக்கு ஆர்டர் கொடுத்ததாகவும் கூறியதாக தெரிகிறது.
வரிச்சியூர் செல்வம் மீது கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் என பதினைந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. தற்போது வெடிகுண்டு பதுக்கிய வழக்கிலும் சேர்க்கப்பட்ட அவரிடம் வெடிகுண்டுகள் தயாரித்தது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வெடிகுண்டுகள் எதற்காக கொண்டு வரப்பட்டது? என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் வரிச்சியூர் செல்வம் வசம் இன்னும் எத்தனை குண்டுகள் உள்ளன? என்பது குறித்தும் அவரது கூட்டாளிகளின் பின்னணி தொடர்பாகவும் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள்.
வரிச்சியூர் செல்வத்திடம் நடத்தப்பட்டு வரும் விசாரணையில் வெடிகுண்டுகள் தொடர்பாக முக்கிய தகவல்கள் போலீசுக்கு கிடைத்துள்ளன. தற்பாதுகாப்புக்காகவே வெடிகுண்டுகளை வரவழைத்ததாகவும் கூறியுள்ள வரிச்சியூர் செல்வம் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைந்த கீரிமணியை மதுரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை மேன்கொண்டுள்ளனர். இதன்பிறகே இந்த 14 வெடிகுண்டுகள் குறித்த மர்மம் விலகும் என தெரிகிறது.
இதனிடையே வெடிகுண்டு சம்பவம் தொடர்பா அண்ணா நகர் காவல்துறையினர் ருபய் சிங் பாபா என்பவரை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.