15 நாட்களுக்கு 144... நெல்லையில்.. கலெக்டர் அதிரடி உத்தரவு!
நெல்லை: பூலித்தேவன் பிறந்த நாள், ஒண்டி வீரன் நினைவு தினம் ஆகியவை அடுத்தடுத்து வருவதால் நெல்லை மாவட்டம் முழுவதும் போலீஸ் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.
இந்த தடை உத்தரவு 15 நாட்களுக்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், சிவகரி தாலுகா நெல்கட்டும்செவல் கிராமத்தில் ஒண்டி வீரன் நினைவு நாள் நாளை அனுஷ்டிக்கப்படுகிறது. இதில் பங்கேற்க ஏராளமானோர் வருகின்றனர்.
2011ல் 40 வாகனங்களும், 2012ல் 680 வாகனங்களும் இந்த நிகழ்ச்சிக்காக வந்துள்ளன. வாகனங்களில் வருபவர்கள் உள்ளே இருக்காமல் வெளியே தலையை நீட்டி கொண்டும், மரு அருந்தி கொண்டும் வருகின்றனர். இதனால் மோதல் சம்பவங்கள் நடக்கின்றன. சட்டம் ஓழுங்கும் கேள்வி குறியாகி வருகிறது.
கடந்த ஆண்டு ஒண்டி வீரன் நினைவு நாள், பூலித்தேவன் பிறந்த நாள் நிகழ்ச்சியின் போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஆண்டு நெல்கட்டும்செவல் கிராமத்தில் ஒண்டி வீரன் நினைவு நாள் நிகழ்ச்சியில் 1500 வாகனங்களில் 15 ஆயிரம் பேர் வருவார்கள் என்று தெரிகிறது.
இந்த நிலையில் நிகழ்ச்சி நடக்கும் இடத்திலோ, வாகனங்கள் வரும் போதே அசம்பாதவித சம்பவங்கள் நிகழ்ந்தால் சட்டம் ஓழுங்கு கடுமையாக பாதிக்கப்படும்.
இது போல் செப் 1ம் தேதி பூலித்தேவன் பிறந்த நாள் விழாவுக்கு வருபவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. எனவே நெல்லை மாவட்டத்தில் சட்டம் ஓழுங்கை பாதுகாக்க இன்று 19ம் தேதி காலை 6 மணி முதல் செப் 2ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இந்த காலங்களில் சுற்றுலா பேரூந்துகள், வெளிமாநில பேருந்துகள், ஆம்னி பஸ்கள் நெல்லை மாவட்டத்துகள் வர தடை விதிக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.