கம்பத்தில் கண்டறியப்பட்ட 14 ஆம் நூற்றாண்டு “நடுகற்கள்”
கம்பம்: கம்பம் அருகே நடந்த அகழ்வாராய்ச்சியில் 14 நூற்றாண்டு கால நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளன.
தேனி மாவட்டம் போடி ஏல விவசாயிகள் சங்க கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் பல்வேறு தொல்பொருள் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கம்பம் அருகே புதுப்பட்டி பகுதியில் களஆய்வு செய்தபோது தமிழகத்தில் அரிதாகக் கிடைக்கக்கூடிய தொன்மையான நினைவுச் சின்னங்கள், நடுகற்கள் கண்டறியப் பட்டுள்ளன.
வேறுபட்ட காலங்கள்:
இக்கற்கள் அவற்றில் பொறிக்கப்பட்டுள்ள சிற்பங்களின் அடிப்படையில் இருவேறுபட்ட காலங்களை சேர்ந்ததாக கருதப்படுகின்றன.
வீரக்கல் கண்டுபிடிப்பு:
கம்பம் புதுப்பட்டி பகுதியில் ஆனிரை மீட்ட அல்லது கவர்ந்த வீரக்கல் மற்றும் நாட்டுக் காவல் நடுகல் ஆகிய இரண்டு கற்களை கண்டறிந்துள்ளனர்.
எதிரியை தாக்கும் சிற்பம்:
இதில் ஆனிரை மீட்ட கல் என்பது கீழிலிருந்து மேலாக நான்கு நிலைகளில் இரண்டு வீரர்களின் வீரச்செயல்களை எடுத்து காட்டுகிறது. முதல் நிலையில் தமிழகப் பகுதியில் அரிதாகக் காணப்படும் குதிரையின் மீது அமர்ந்து எதிரியை ஈட்டி கொண்டு எறியப்படும் சிற்பம் காணப்படுகிறது.
கணவன் - மனைவி சிற்பம்:
அவ்வீரனின் கால் பகுதியில் பெண் ஒருவரின் சிற்பம் காணப்படுகிறது. இந்த பெண், வீரனின் மனைவியாக இருக்கும்பட்சம் கணவனுடன் அவளும் இறந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
போரில் இறப்பு:
மூன்றாம் நிலையில், வீரன் ஒருவன் சங்ககாலம் முதல் நடைமுறையில் இருந்த தமிழருக்கே உரித்தான ஆனிரை மீட்டல் எனப்படும் வீரச்செயலை செய்தபோது ஏற்பட்ட போரில் இறந்துவிட்ட செய்தியைக் காட்டுகிறது.
சூரிய, சந்திர சின்னங்கள்:
2 ஆம் நிலையில், போரில் ஈடுபட்ட இரு வீரர்களும் தங்கள் மனைவியரோடு இறந்த தன் அடையாளத்தையும், 4 ஆம் நிலையில் இவர்கள் சிவலோகப்பதவி அடைந்ததன் அடையாளமாக சிவலிங்கமும், அதன் இருபுறமும் சூரியன், சந்திரன் சின்னங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.
இரு ஆட்சியர்கள் போட்டி:
இதன்மூலம் இப்பகுதியில் இரு ஆட்சியாளர்களிடையே ஆனிரை கவர்தல் அல்லது மீட்டல் போர் நடைபெற்றுள்ளது தெரிய வருகிறது. இது 11 அல்லது 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த வீரக்கல் என ஆய்வில் புலப்படுகிறது.
14 ஆம் நூற்றாண்டு கற்கள்:
இந்த 14 அல்லது 15 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. தொடர்ந்து இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.