தேர்தல் செலவுக் கணக்கு தாக்கல் செய்யும் தேதி முடிந்து விட்டது... 165 பேர் தாக்கல் செய்யவில்லை- லக்கா
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டவர்களில், 165 வேட்பாளர்கள் தேர்தல் செலவுக் கணக்கை தாக்கல் செய்யவில்லை என்று தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் கடந்த மே மாதம் 19-ந் தேதி வெளியானது. இந்நிலையில், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பலர், காலஅவகாசம் நிறைவடைந்த போதிலும் தங்களது செலவு கணக்கை இன்னும் தாக்கல் செய்யவில்லையாம்.

இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தேர்தல் முடிவுகள் வெளியான தேதியில் இருந்து ஒரு மாதத்திற்குள் வேட்பாளர்கள் அனைவரும் தேர்தல் செலவுக் கணக்கை, தாக்கல் செய்திருக்க வேண்டும். அதன்படி, செலவுக் கணக்குகளை ஜூன் 18-ந்தேதி கடைசி நாளாகும். தேர்தலில் மொத்தம் 3,728 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்களில் 3,563 வேட்பாளர்கள் மட்டுமே தேர்தல் செலவுக்கணக்கு விவரங்களை அளித்துள்ளனர்.
தேர்தல் ஆணைத்தால் அங்கீகரிக்கப்பட்ட அ.தி.மு.க, தி.மு.க., தே.மு.தி.க., காங்கிரஸ், பா.ஜ.க., கம்யூனிஸ்டு போன்ற கட்சிகளின் சார்பில் 996 பேர் போட்டியிட்டனர். அவர்களில், 979 பேர் செலவுக் கணக்கை தாக்கல் செய்துவிட்டனர்.
தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள கட்சிகளின் சார்பில் 1,179 பேர் போட்டியிட்டனர். அவர்களில், 1,118 வேட்பாளர்கள் செலவுக்கணக்குகளை தாக்கல் செய்துள்ளனர். சுயேச்சையாக போட்டியிட்ட 1,554 பேரில் 1,466 பேர் செலவுக்கணக்கை தாக்கல் செய்துள்ளனர்.
அதன்படி இதுவரை 165 வேட்பாளர்கள் இன்னும் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யவில்லை. இது தொடர்பாக அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். அதற்கு பதிலளிக்காமல், குறிப்பிட்ட காலத்துக்குள் செலவுக் கணக்கு விவரங்களைத் தாக்கல் செய்யவில்லை என்றால், சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தேதியில் இருந்து 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications