பிக்கப் வேன், ரூ.2 லட்சத்துடன் வடமாநிலத்தவர்கள் எஸ்கேப்! பிடிக்க முடியாது என முதலாளிக்கு வீடியோ
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்ஓ குடிநீர் வினியோக நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த 15 நாளில் வடஇந்தியர்கள் 2 பேர் பிக்கப் வேன், ரூ.2 லட்சம் பணம் மற்றும் பிற பொருட்களை திருடி சென்றனர். மேலும் எங்களை பிடிக்க முடியாது என அவர்கள் முதலாளிக்கு வீடியோ அனுப்பியுள்ளனர்.
Recommended Video
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த அம்மனாங்கோவில் பகுதியில் கோபி என்பவர் 15 ஆண்டுகளாக ஏஆர்ஜி என்டர்பிரைசஸ் என்ற பெயரில் நிச் மற்றும் டெல்டா என்கிற பெயர்களில் ஆர்ஓ குடிநீர் வினியோகம் செய்யும் நிறுவனம் இயங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தில் வேலை செய்வதற்கு ஆள் பற்றாக்குறை ஏற்பட்டதால் வேலைக்கு ஆட்கள் தேவை என விளம்பரம் செய்தார்.

வடமாநிலத்தினருக்கு
இதனை அறிந்த வட மாநிலத்தைச் சேர்ந்த மஞ்சித் மற்றும் நிர்மல் ஆகியோர் கடந்த மாதம் 27ம் தேதி வேலை வேண்டும் என கோபிக்கு போன் செய்தனர். இதனை தொடர்ந்து கோபியும் அவர்களை அழைத்து ஆதார் அட்டை மற்றும் புகைப்படங்களை தரவேண்டும் என்கிற நிபந்தனையுடன் வேலைக்கு அமர்த்தினார்.

ஆதார் அட்டை வழங்கவில்லை
இருவரும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தண்ணீர் நிறுவனத்தில் தங்க ஏற்பாடு செய்து கொடுத்தார்.இதையடுத்து அவர்கள் இருவரும் அங்கு தங்கி வேலை செய்து வந்தனர். மேலும் அடையாள அட்டை ஆதாரம், புகைப்படங்களையும் கொடுக்காமல் இருந்தனர். கோபி கேட்டபோதெல்லாம் ஏதாவது காரணத்தை கூறி இழுத்தடித்து வந்தனர்.

பொருட்கள் திருட்டு
இந்நிலையில் மே 15ம்தேதி காலை தண்ணீர் கம்பெனியில் இருந்த பிக்கப் வாகனம் மாயமானது. அதோடு பிற வாகனங்களில் இருந்த டீசல் 50 லிட்டர், ரொக்கப் பணம் சுமார் 2 லட்சம் ரூபாய், 50ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஸ்டீல் சாமான்கள் ஒரு சிலிண்டர், எல்இடி டிவி என அனைத்து பொருட்களும் திருடு போய் இருந்தது. வழக்கம் போல் காலை வேலைக்கு வந்த ஊழியர்கள் கம்பெனியின் சாவி வெளியே வீசப்பட்டு இருந்ததையும், பொருட்கள் திருட்டு போனதையும், வடமாநிலத்தை சேர்ந்த 2 பேரும் மாயமாகி இருந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

போலீசார் விசாரணை
இதுபற்றி கோபிக்கு தெரிவித்துள்ளனர். இதுபற்றி நாட்றம்பள்ளி காவல்துறையில் புகார் செய்யப்பட்டது. புகாரில் பிக்கப் வாகனம், ரூ.2 லட்சம் உள்பட பல்வேறு பொருட்களை மஞ்சித், நிர்மல் திருடி சென்றதாக கூறப்பட்டு உள்ளது. அதனடிப்படையில் நாட்றம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

‛பிடிக்க முடியாது’ என வீடியோ
இந்த நிலையில் கோபிக்கு இன்று காலை செல்போனில் ஒரு வீடியோ வந்தது. அதில் நிர்மல் வண்டி ஓட்ட மஞ்சித் வீடியோ எடுத்து நான் பீகாரை நோக்கி செல்கிறேன். எந்த போலீசாரும் எதுவும் செய்ய முடியாது என கூறுகிறார். இதுவும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி இருவரையும் கைது செய்ய முயற்சித்து வருகின்றனர். வேலைக்கு வந்த இடத்தில் வாகனம், பணம், பொருட்களை வடமாநிலத்தவர்கள் திருடி சென்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications