மோடியே திரும்பி போ..: கோவையில் போராட்டம் நடத்திய 25 இயக்கங்களைச் சேர்ந்த 200 பேர் கைது
கோவை: பிரதமர் மோடியின் வருகையை எதிர்த்து கோவையில் கருப்புக் கொடி போராட்டம் நடத்திய 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதிதாக கட்டப்பட்டுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையை திறந்து வைக்க, கொடிசியா மைதானத்தில் நடக்கும் பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவை வருகிறார். அவரது வருகையையொட்டி அங்கு 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் மோடியின் வருகையை எதிர்த்து பெரியார் திராவிடக் கழகம் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் 25 இயக்கங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் அவினாசி சாலை லட்சுமி மில் சந்திப்பில் கருப்புக் கொடியோடு போராட்டம் நடத்தினர்.
ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலாவின் மரணத்திற்கு காரணமான மோடியே திரும்பி போ, வெமுலாவின் மரணத்திற்கு காரணமான மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியை கைது செய், தலித் மக்களுக்கு எதிராக செயல்படும் மோடியே திரும்பி போ என்று அவர்கள் கோஷமிட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அவினாசி சாலையில் இருக்கும் லட்சுமி திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.