சேலம் 8 வழிச்சாலை திட்டம்.. வாயில் கருப்பு துணி கட்டி 23 கிராமத்தினர் போராட்டம்
டெல்லி: சென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்டம் விவகாரத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்வதை எதிர்த்து 23 கிராம மக்கள் வாயில் துணி கட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய அரசின் பாரத் மாலா திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சென்னை - சேலம் இடையே 8 வழிச்சாலைத் திட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்துக்காக காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மொத்தம் 1,900 ஹெக்டேர் பரப்பளவு நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டது.
இத்திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் சார்பில் 50 க்கும் மேற்பட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டன. இந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், சென்னை-சேலம் இடையிலான பசுமை வழிச்சாலைத் திட்டம் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்தது.
மேலும், இத்திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை 8 வாரங்களுக்குள் உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்ட தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
தெற்கு அரபிக் கடலில் எப்போது தொடங்கும் தென்மேற்கு பருவமழை? தென் தமிழகத்தின் வறட்சியை போக்குமா?
இதையடுத்து சேலம் - சென்னை இடையேயான 8 வழிச்சாலை திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளதைக் கண்டித்து, கடந்த சில நாட்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை இன்று உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. இதனிடையே சேலத்தில் உத்தமசோழபுரம், ஆச்சாங்குட்டப்பட்டி உள்பட 23 கிராமத்தினர் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அவர்கள் வேண்டாம் வேண்டாம் 8 வழிச்சாலை திட்டம் வேண்டாம், வாழ விடு வாழ விடு விவசாயிகளை வாழவிடு என்ற பதாகைகளை ஏந்தி வாயில் கருப்பு துணி கட்டிக் கொண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.