கடலூரில் தொடரும் கனமழை: வெள்ளத்தில் மிதக்கும் 400 கிராமங்கள்... முகாம்களில் 25,000 பேர்
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பயங்கர வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏரிகள், ஆறுகள், ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் 400 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
கடலூர் மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 9-ம் தேதி பெய்த கனமழையால் சிதம்பரம், பண்ருட்டி, காட்டு மன்னார்கோவில், குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி, வடலூர் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதைத் தொடந்து கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஒட்டுமொத்த கடலூர் மாவட்டமே வெள்ளக்காடாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக மிக அதிக கனமழை கொட்டி வருகிறது. நேற்றிரவும் விடிய விடிய பலத்த மழை பெய்தது.
இதனால் கடலூர், பண்ருட்டி, வடலூர், குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், புவனகிரி, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கொண்டலவாடி, நெமிலி, களவானூர், குமாரமங்கலம் கிராமங்களுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. கோவிலானூர் ஓடை உடைந்து விருத்தாசலம், வடலூர் பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
என்எல்சி சுரங்கத்தில் தேங்கியிருந்த மழை நீரும் வெளியேற்றப்பட்டது. உளுந்தூர்பேட்டை பகுதியில் இருந்து வந்த தண்ணீரும் சேர்ந்து பரவனாற்று ஓடையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை - கும்பகோணம் சாலை வெள்ளத்தில் மூழ்கியது.
உடைப்பு ஏற்பட்ட செங்கால் ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. விருத்தாசலம் அருகே உள்ள மூப்பனார் ஏரி நிரம்பி வழிகிறது. அந்த தண்ணீருடன் நெய்வேலி சுரங்க தண்ணீரும் சேர்ந்ததால் செம்பலாக்குறிச்சி, சித்தேரிகுப்பம் சுரங்கப்பாதை தண்ணீரில் மூழ்கியது. இதனால் அப்பகுதியில் கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.
தென்பெண்ணை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் காரணமாக கடலூர் அருகே உள்ள வெள்ளப்பாக்கம் கிராமத்துக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.
இதேபோல் வீராணம், பெருமாள், வாலஜா ஏரிகளிலும் இருந்து நீர் தொடர்ந்து திறக்கப்படுகிறது. இக்கனமழையால் மொத்தம் 400-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது. மொத்தம் 25,000க்கும் மேற்பட்டோர் மேடான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
இம்மாவட்டத்தில் அரசு நிவாரண உதவிகளை விட தமிழகம் முழுவதும் தன்னார்வலர்கள் அதிக அளவில் நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.
இதனிடையே கடலூர் மாவட்டத்தில் 100 டன் பால் பவுடர், 80,000 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டதாக அம்மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications