தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 25,000 துணை ராணுவ வீரர்கள் தமிழகம் வருகை: லக்கானி
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 300 கம்பெனிகளைச் சேர்ந்த சுமார் 25 ஆயிரம் துணை ராணுவப்படையினர் மே 3ம் தேதி வருகை தர இருப்பதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ளன. இத்தேர்தலை நேர்மையாகவும், அமைதியாகவும் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. எனவே, தேர்தல் பாதுகாப்பு பணிக்கென துணை ராணுவப் படையினர் தமிழகம் வருகை தருகின்றனர்.
இந்நிலையில், இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட மே3ம் தேதி துணை ராணுவப்படையினர் தமிழகம் வருகின்றனர். 300 கம்பெனிகளை சேர்ந்த 25 ஆயிரம் வீரர்கள் தமிழகம் வருகின்றனர். துணை தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா வரும் 3ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆய்வு செய்கிறார். புதிய வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி எண், அடையாள அட்டை எண் எஸ்.எம்.எஸ்.,ல் அனுப்பப்படும்' என்றார்.
முன்னதாக தமிழக தேர்தல் பாதுகாப்புக்காக முதலில் 275 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் மட்டுமே வருவதாக இருந்தது. ஆனால், அதனைத் தொடர்ந்து பறக்கும் படையில் கூடுதல் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதனால், 300 கம்பெனி ராணுவ வீரர்கள் தமிழகத்திற்கு வருகிறார்கள். ஒரு கம்பெனியில் 72 முதல் 100 வீரர்கள் இருப்பார்கள். வடமாநிலங்களில் இருந்து துணை ராணுவ வீரர்கள் தனி ரயில் மூலம் தமிழகம் வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர 122 பொதுபார்வையாளர்கள், 32 போலீஸ் பார்வையாளர்கள், 118 ஐபிஎஸ் பயிற்சி அதிகாரிகளும் 29ம் தேதி முதல் தமிழகம் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.