குடல்புழு நீக்க நாள்: சத்துக்குறைபாட்டை தடுக்க மாணவர்களுக்கு மாத்திரைகள் விநியோகம்
சென்னை: தேசிய குடல்புழு நீக்க நாளை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும். இன்று குடல் புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது.
தேசிய குடல்புழு நீக்க நாளாக பிப்ரவரி10ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் ஒரே நாளில் ஒரு வயதுக் குழந்தைகள் முதல் 19 வயதுக்கு உள்பட்டோர் வரை உள்ளவர்களுக்கு குடல்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன. இதன்மூலம் ரத்த சோகை, சத்துக் குறைபாடு நோய்கள் தடுக்கப்படுகிறது. மேலும், உடல் வளர்ச்சி, அறிவு வளர்ச்சி போன்றவைகள் ஏற்படுகின்றன.
தமிழகத்தில் இன்று உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்க வழங்கப்பட வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டதை அடுத்து சுகாதாரத் துறை சார்பில் ஒன்று முதல் 19 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தேசிய குடல் புழு நீக்க நாளான இன்று குடல் புழு நீக்க மருந்து (அல்பெண்டசோல்) வழங்கும் பணி பிற்பகல் 2 மணி அளவில் நடைபெற்றது. இந்த மாத்திரையை சாப்பிடுவதின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது என்பதை தலைமை ஆசிரியர்கள் மாணவ, மாணவியருக்கு தெரியப்படுத்தினர்.
குடல்புழு நீக்க நாள்
உலக சுகாதார நிறுவன கணக்கின்படி இந்தியாவில் 1 முதல் 14 வயதுடைய குழந்தைகளில் 68 சதவீதம் பேர் குடற்புழு தொற்று ஏற்படக்கூடிய அபாய நிலையில் உள்ளனர். 15 முதல் 19 வயதுடைய 56 சதவீத பெண்கள், 30 சதவீத ஆண்களும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 50 சதவீதம் பேர் உடல் வளர்ச்சி குன்றியும், 43 சதவீதம் பேர் எடை குறைவாகவும் உள்ளனர். இதுபோன்ற பாதிப்புகளிலிருந்து காப்பாற்றி கொள்ள வரும் 10ம் தேதி தேசிய குடல்புழு நீக்க நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மதுரை மாவட்ட பள்ளிகள்
தேசிய குடல் புழுக்கள் நீக்கம் தினத்தை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் 1 முதல் 19 வயது வரை உள்ளவர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் என 7 லட்சம் பேருக்கு 'அல்பெண்டாசோல்' மாத்திரைகள் வழங்க பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் வழங்கப்பட்டது. இதில் கல்வித்துறையில் மட்டும் 5 லட்சம் மாத்திரைகள் வழங்கப்பட்டன.
புகைப்படஙகள் அவசியம்
பாப்புநாயக்கன் பட்டியில் உள்ள ஸ்ரீ கந்தசாமி வித்யாலயம் மேல்நிலைப்பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு குடல்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன.
வகுப்புகள் வாரியாக மாணவர்களுக்கு மாத்திரைகள் வழங்குவதை போட்டோக்கள் எடுத்து இரண்டு நாட்களுக்குள் சம்மந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு (டி.இ.ஓ.,) கட்டாயம் அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளதை அடுத்து புகைப்படங்கள் எடுக்கப்பட்டன.
சுத்தமான குடிநீர்
மாணவர்கள் மாத்திரைகளை மென்று உட்கொள்வதற்கு, சுத்தமான குடிநீர் வசதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கு மாத்திரையை வழங்கக் கூடாது. மாத்திரையை அப்படியே விழுங்கச் செய்யக் கூடாது. குழந்தைகளிடமோ, பெற்றோர்களிடமோ, குடல் புழு மாத்திரையை வீட்டுக்கு கொடுத்தனுப்பக் கூடாது என கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
பக்க விளைவுகள்
இந்த மாத்திரை அனைத்து குழந்தைகளுக்கும் பாதுகாப்பானது என்றாலும், அதிகமாக குடல் புழு இருக்கும் குழந்தைகள் இந்த மருந்தை உட்கொள்ளும்போது லேசான மயக்கம், குமட்டல், வாந்தி, தலைவலி, வயிற்று வலி போன்ற பொதுவான பக்க விளைவுகள் ஏற்படலாம். அவ்வாறு ஏற்பட்டால், திறந்தவெளி, காற்றோட்டமானப் பகுதியில் படுக்க வைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
உப்பு கரைசல் அவசியம்
பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர், உப்பு சர்க்கரைக் கரைசல் கொடுத்து கண்காணிக்க வேண்டும். பக்க விளைவுகள் அதிகமானாலோ அல்லது தொடர்ந்து இருந்தாலோ, அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும். மருத்துவ அலுவலர், செவிலியர் ஆகியோரின் செல்போன் எண்களை தகவல் பலகையில் ஒட்டி வைத்திருக்க வேண்டும் என்றும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில்
நாமக்கல் மாவட்டத்தில் 5,70,890 குழந்தைகளுக்கு குடல்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்கள், அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் உள்பட அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் நடைபெற்றது.