காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3 ஏரிகள் உடைந்தன! 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம்....
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர் மழையால் கரசங்கால் ஏரி, குண்ணவாக்கம் ஏரி, மற்றும் அவலூர் ஏரி கரைகள் உடைந்து அருகில் உள்ள 25 கிராமங்களில் வெள்ல நீரில் மிதக்கின்றன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், அம்மாவட்டத்தில் மொத்தம் உள்ள 912 ஏரிகளில் 468 ஏரிகள் முழுவதும் நிரம்பி உள்ளன. 319 ஏரிகள் 75 சதவீதமும், 195 ஏரிகள் 50 சதவீதமும் நிரம்பி உள்ளன.
இந்த மாவட்டத்தின் பெரிய ஏரிகளான மதுராந்தகம் ஏரி, தென்னேரி, பிள்ளைபாக்கம் ஏரி, தையூர் ஏரி, ஸ்ரீபெரும்புதூர் ஏரி, மணிமங்கலம் ஏரி, மானாம்பதி ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. மேட்டுத்தெரு மூங்கில் மண்டபம், ரங்கசாமி குளம், கலெக்டர் அலுவலக குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
இந்த நிலையில் கரசங்கால் ஏரி, குண்ணவாக்கம் ஏரிகளின் கரைகள் உடைந்து சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. குடியிருப்புகளில் மழை நீர் புகுந்து 15-க்கும் மேற்பட்ட கிராமங்கள் தண்ணீரில் சூழப்பட்டுள்ளது.
வாலாஜாபாத் - தாம்பரம் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் நீரால் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்று பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. அவலூர் ஏரி கரை உடைந்து அருகில் உள்ள 10 கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்தபடி உள்ளனர்.
மழை வெள்ளத்தினால் பதிக்கப்பட்ட 7694 பேர் 26 முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். காஞ்சிபுரத்தில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 10 குழுக்களாக பிரிக்கப்பட்டு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவ குழுவினரும் நடமாடும் வாகனத்தில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தொடர் மழை காரணமாக பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும் தண்ணீரில் மூழ்கி உள்ளன. '
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:
காஞ்சிபுரம்; 271, ஸ்ரீபெரும்புதூர்- 229, மதுராந்தகம்- 211, செங்கல்பட்டு- 318, உத்திரமேரூர்- 210, செய்யூர்- 111, திருக்கழுக்குன்றம்- 269, மீனம்பாக்கம்- 329, தாம்பரம்- 329, கேளம்பாக்கம்- 265