கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை- குமரியில் உருக்கம்!
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் லாட்ஜ் ஒன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் போலீசார் கைகளுக்கு அவர்கள் சாவதற்கு முன்பு எழுதி வைத்த உருக்கமான கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில், தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி விவேகானந்தபுரம் சந்திப்பில் உள்ள ஒரு லாட்ஜில் கடந்த 4 ஆம் தேதி இரவு 13 வயது மதிக்கத்தக்க சிறுவனுடன் ஒரு ஆணும், ஒரு பெண்ணும் வந்தனர். அந்த சிறுவனை தங்களுடைய மகன் என்று அவர்கள் லாட்ஜ் ஊழியரிடம் அறிமுகப்படுத்தி கொண்டனர்.
பிறகு அவர்கள் 3 பேரும் ஆந்திர மாநிலம் விஜயவாடா மஞ்சாலுதுறையை சேர்ந்த அனில்குமார் சவுத்ரி என்ற முகவரியை கூறி கொண்டு குளிர்சாதன அறை எடுத்து தங்கியுள்ளனர். இதனையடுத்து 2 நாட்களாக அவர்கள் கன்னியாகுமரியில் உள்ள பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்.
நேற்று காலையில் அவர்கள் தங்கியிருந்த அறை வெகுநேரம் ஆகியும் திறக்கப்படவில்லை. மதியம் 1 மணிக்கு லாட்ஜ் ஊழியர் கதவை தட்டினார். ஆனால் அறைக்குள் இருந்து எந்தவொரு சத்தமும் வரவில்லை. கன்னியாகுமரியை சுற்றி பார்த்த அசதியில் அவர்கள் தூங்கி கொண்டிருக்கலாம் என்று நினைத்து ஊழியர் சென்று விட்டார்.
மதியம் 3 மணிக்கு சாப்பாடு ஏதும் வேண்டுமா என்று கேட்பதற்காக, அங்கு லாட்ஜ் ஊழியர் மீண்டும் சென்று கதவை தட்டினார். அப்போதும் எந்தவொரு பதிலும் அங்கிருந்து வரவில்லை. இதனால் ஏதோ விபரீதம் நிகழ்ந்து விட்டது, என்று நினைத்த ஊழியர் இதுகுறித்து கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
இதனையடுத்து போலீசார் லாட்ஜிக்கு விரைந்து வந்து அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு அவர்கள் மூவரும் இறந்து கிடந்தனர்.
மேலும் அந்த அறையில் விஷ பாட்டில், குளிர்பான பாட்டில் போன்றவை கிடந்தன. அங்குள்ள ஒரு மேஜையில் கடிதம் இருந்தது. அந்த கடிதம் ஆங்கிலம் மற்றும் இந்தியில் எழுதப்பட்டிருந்தது.
அந்த கடிதம் மூலம் அவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் என்பதும், பெற்றோர், மகனுடன் தற்கொலை செய்து கொண்டதும், அந்த கடிதத்தை சாவதற்கு முன்பு தந்தை எழுதியதும் தெரியவந்தது.
மேலும் அந்த கடிதத்தில், "எனக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் குடும்பத்துடன் தற்கொலை செய்யும் முடிவை தேடிக் கொண்டுள்ளோம். லாட்ஜ் ஊழியர்களை தொந்தரவு செய்யாதீர்கள்.
எங்களுடைய இறுதி சடங்கை கன்னியாகுமரியிலேயே போலீசார் செய்ய வேண்டும். என்னுடைய மனைவி கழுத்தில் 1 தங்க சங்கிலி மற்றும் கையில் 2 மோதிரம் உள்ளது.
இதனை எடுத்து கொண்டு எங்களுடைய தகன செலவுக்கு பயன்படுத்தி கொள்ளுங்கள். லாட்ஜில் கூறப்பட்ட முகவரி பொய்யானது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.