ஆம்பூர் அருகே பாலாற்றில் தேங்கிய தோல் கழிவுநீரை குடித்து 3,600 வாத்துகள் பலி
வேலூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பாலாற்றங்கரைகளில் வாத்து வளர்ப்பு தொழில் நடந்து வருகிறது. இந்நிலையில், பாலாற்றில் ஓடி வந்த தோல்கழிவுநீரை பருகிய வாத்துகள் திடீரென மணலில் சுருண்டு விழுந்து இறந்தன.
நேற்று மாலை வரை 3,420 வாத்துக்கள் அடுத்தடுத்து இறந்தன. இன்று காலையில் நூற்றுக்கும் மேற்பட்ட வாத்துக்கள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இறந்த வாத்துக்களை உரிமையாளர் கோபியும் அவரது குடும்பத்தினரும் பாலாற்றின் மணலிலேயே குழிதோண்டி புதைத்தனர்.

ஆம்பூர் அருகே அயித்தம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கோபி (வயது 32). இவர் சுமார் 4 ஆயிரம் வாத்து குஞ்சுகளை ஆலங்காயம், குடியாத்தம் ஆகிய இடங்களில் இருந்து வாங்கி வளர்த்து வந்தார். ஆம்பூர் அருகே கொம்மேஸ்வரம் பாலாற்றின் பாலத்தின் அருகில் ஒதுக்குபுறமான இடத்தில் கொட்டகை அமைத்து வாத்து வளர்ப்பில் ஈடுபட்டார்.
தினமும் பாலாற்றில் அவர் வாத்துக்களை மேய்த்து விட்டு அருகில் உள்ள பாலாற்றில் ஓடும் நீரை வாத்துக்கள் குடிக்க விடுவது வழக்கம். கடந்த 60 நாட்களாக எந்தவித நோயும் தாக்கவில்லை.
நேற்று மாலையில் பாலாற்றில் வழக்கம்போல வாத்துக்கள் நீரை அருந்தியது. பின்னர் ஒன்றன்பின் ஒன்றாக வாத்துக்கள் திடீரென சுருண்டு விழுந்து இறந்தது. வாத்துகளுக்கு மருந்து கொடுத்து காப்பாற்ற முயன்றனர். ஆனால் சுமார் 3 ஆயிரம் வாத்துக்கள் இறந்து போனது. இதையடுத்து கோபியும் அவரது குடும்பத்தினரும் பாலாற்று மணலில் குழி தோண்டி வாத்துக்களை புதைத்தனர்.
பாலாற்றின் அருகில் தோல் தொழிற்சாலைகளில் இருந்து தொடர்ந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்களும் பாதிக்கப்பட்டு வருகிறது. தற்போது, சுமார் 3 ஆயிரத்து 600 வாத்துக்கள் இந்த நீரை பருகி இறந்துள்ளன. இதற்கு முன்னர் பலமுறை புகார் தெரிவித்தும் மாவட்ட மாசு கட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் சில தோல் தொழிற்சாலைகளில் இருந்து பைப் லைன்களே அமைத்து கழிவுநீரை அப்பட்டமாக வெளியேற்றுகின்றனர். கழிவுநீரை குடித்த வாத்துக்களுக்கு இந்த கதி என்றால் பாலாற்று குடிநீரை பயன்படுத்தும் மக்களின் கதி என்ன? என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.
கடந்த இரு தினங்களாக வேலூர் பாலாற்றில் உள்ள குட்டைகளில் ரசாயன கழிவுநீர் கலந்து லட்சக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தது. இப்போது ஆயிரக்கணக்கான வாத்துக்கள் உயிரிழந்துள்ளன.












Click it and Unblock the Notifications