குமரி: தனியார் காப்பகத்தில் இருந்து 38 மாணவர்கள் மீட்பு
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் தனியார் காப்பகத்தில் சித்திரவதைக்கு ஆளான 38 மாணவர்களை போலீசார் மீட்டனர்.
குமரி மாவட்டம் அழிக்கால் அருகே உள்ள பரம்பன் விளையில் ஒரு தனியார் காப்பகம் இயங்கி வருகிறது. இங்கு குமரி மற்றும் நெல்லை, தேனி, விருதுநகர் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏழை மாணவர்கள் பலர் தங்கி அருகில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர்.
இங்குள்ள மாணவர்களை காப்பக வார்டன் அநாகரீமாக பேசுவதோடு அவர்களை கொடுமைபடுத்துவதாக மாணவர்கள் புகார் கூறி வந்தனர். இந்தநிலையில் நேற்று 10-ம் வகுப்பு மாணவர் ஒருவர் ராஜாக்கமங்கலம் போலீசில் வார்டன் மீது ஒரு புகார் கொடுத்தார். அதில் தன்னையும், சக மாணவர்களையும் வார்டன் கொடுமை படுத்துவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
போலீசார் இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என்று தெரிகிறது. எனவே இந்த தகவல் குழந்தைகள் நல பாதுகாப்பு குழும அதிகாரிகளுக்கும், ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கும், சைல்டு ஹெல்ப் லைன் குழுவினருக்கும் தெரிவிக்கப்பட்டது.
இன்று அவர்கள் அந்த காப்பகத்திற்கு அதிரடியாக சென்றனர். அங்கிருந்த 19 மாணவர்களை மீட்டு நாகர்கோவில் அழைத்து வந்தனர். ஒழுகினசேரியில் உள்ள குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகத்தில் அவர்களை தங்க வைத்தனர்.
மாணவர்களிடம் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சார்லெட் விசாரித்தார். அப்போது மாணவர்கள் பலரும் தங்களுக்கு ஏற்பட்ட காயங்களை அதிகாரிகளிடமும், போலீசாரிடமும் காட்டி அழுதனர்.
இதைக்கண்ட அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் காப்பகம் குறித்தும், அங்கு மாணவர்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்தும் விரிவான விசாரணைக்கு ஏற்பாடு செய்தனர்.
மாவட்ட நிர்வாகத்திற்கும், சமூக நலத்துறையினருக்கும் இத்தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் மூலம் மாணவர்களை அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கவும், காப்பகத்தை சோதனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கவும் ஏற்பாடு செய்தனர்.
மேலும் 19 குழந்தைகள் மீட்பு
இதேபோல கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய் பட்டணம் அருகில் உள்ள கிராமம் அழிக்கால். இங்கு ஒரு தனியார் காப்பகம் செயல்பட்டு வந்தது. இந்த காப்பகத்தில் 19 குழந்தைகள் தங்கி பள்ளிக்கு சென்று வந்து கொண்டிருந்தனர்.
அக்குழந்தைகளை நிர்வாகிகள் துன்புறுத்துவதாக கன்னியாகுமரி மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. புகார் அடிப்படையில் சமூக நலத்துறை அதிகாரிகள் 19 குழந்தைகளையும் மீட்டனர். அத்துடன் அவர்களை நாகர்கோவிலில் உள்ள அரசு காப்பகத்தில் தற்காலிகமாக தங்க வைத்துள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் காப்பகத்தில் உள்ள மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.