ஒரே ஆண்டில் 4 இந்து பிரமுகர்கள் கொலை.. பின்னணியில் யார்?
சென்னை: சென்னையில் திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஷ் குமாருடன் சேர்த்து கடந்த ஒரு ஆண்டில் இதுவரை தமிழகத்தில் நான்கு இந்து அமைப்புகளின் பிரமுகர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
மதுரையில் தொடங்கிய இந்தக் கொலையானது தற்போது சென்னை வரை நீண்டிருப்பது காவல்துறைக்கு விடுக்கப்பட்டுள்ள சவாலாக கருதப்படுகிறது.
மதுரை, நேதாஜி சாலையில், கடந்தாண்டு, ஜூன் மாதம், 26ம் தேதி, இந்து முன்னணி பிரமுகரான சுரேஷ்குமார் என்பவர் நள்ளிரவில் மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
அதேபோல கடந்த ஆண்டு ஜுலை மாதம் 1ம் தேதி வேலூரில் இந்து முன்னணி பிரமுகர் வெள்ளையப்பன் கொலை செய்யப்பட்டார். இவரும் வெட்டிக் கொல்லப்பட்டார்.
இந்த இரண்டு கொலைகளுமே ஒரே பாணியில் அமைந்த்தால் போலீஸார் இரு கொலைகளிலும் ஒரே கும்பல்தான் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று கருதினர்.
அதேபோல கடந்த ஆண்டு ஜூலை 19ம் தேதி சேலத்தில், பா.ஜ.க மாநில செயலாளரான ஆடிட்டர் ரமேஷ், தன் அலுவலகத்தில் இருந்து இறங்கி வரும்போது, மூவர் கும்பல் அவரை வெட்டிச் சாய்த்தது.
இதையடுத்து தமிழக காவல்துறையின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு விசாரணை முடுக்கி விடப்பட்டது. இவர்களின் தீவிர விசாரணையில், நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில், அபுபக்கர் சித்திக் ஆகியோருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்த்து.
இவர்கள் சென்னையில் தங்களது அடுத்த கொலைத் திட்டத்தை நிறைவேற்றக் காத்திருந்த நிலையில், போலீஸ் பக்ருதீன் போலீஸில் சிக்கினார். அவர் கொடுத்த தகவலின் பேரில் ஆந்திர மாநிலம் சித்தூரில் பதுங்கியிருந்த பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரை துப்பாக்கி முனையில் பிடித்தனர்.
இந்த நிலையில்தான் தற்போது சென்னை அம்பத்தூரில் சுரேஷ் குமார் கொலை நடந்துள்ளது. இது காவல்துறைக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.
பக்ருதீன் உள்ளிட்டோர் சிறையில் உள்ள நிலையில் இந்தக் கொலை நடந்துள்ளது. எனவே தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் அபுபக்கர் சித்திக்கின் சதித் திட்டம் இதில் இருக்குமா என்ற சந்தேகத்தில் போலீஸார் உள்ளனராம்.