உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு; அக்டோபரில் தேர்தல்- அமைச்சர் எஸ்.பி. வேலுமணி
சென்னை: யாருடைய ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடந் தது என்று சட்டசபையில் அதிமுக திமுக உறுப்பினர்கள் இடையே நேற்று வாக்குவாதம் நடந்தது.
சட்டசபையில் நேற்று உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. வரும் உள்ளாட்சித் தேர்தலில், பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு நடைமுறைக்கு வரும் என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
வரும் அக்டோபரில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி பஞ்சாயத்துக்களுக்கு ஆண்களுக்கு இணையான பிரதிநிதித்துவம் பெண்களுக்கும் கிடைக்கும் என்றார். நேற்றைய விவாதத்தில் உறுப்பினர்கள் பேசியதன் முக்கிய அம்சங்கள்.
திமுக உறுப்பினர் மா.சுப்பிரமணியன் பேசும் போது, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித் துறை அமைச் சராக இருந்தபோதுதான் இரு சமூகங்கள் இடையே இருந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு பாப்பாபட்டி, கீரிப்பட்டியில் ஊராட்சித் தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது என்றார்.
அப்போது குறுக்கிட்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பாப்பாபட்டி, கீரிப்பட்டி ஊராட்சித் தலைவர் தேர்தலை நடத்த 1991-1996, 2001-2006 ஆகிய ஆண்டுகளில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப் பட்டன. பலமுறை தேர்தல் வெற்றிகரமாக நடத்தப்பட்டு ஊராட் சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட் டார். பின்னர் அவர்கள் ராஜினாமா செய்தனர். அதிமுக அரசு எடுத்த தொடர் முயற்சிகளால்தான் 2006ல் திமுகவால் அங்கு தேர்தல் நடத்த முடிந்தது என்றார்.
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும் போது, பாப்பாபட்டி, கீரிப்பட்டியில் தேர்தல் நடத்த திமுக ஆட்சியில்தான் நடவடிக்கை எடுக்கப் பட்டது என்பதுபோல மா.சுப்பிரமணியன் பேசினார். நான் நாடாளு மன்ற உறுப்பினராக இருந்த போது முதல்வர் ஜெயலலிதா உத் தரவின்பேரில் அங்கு தேர்தல் நடத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்று கூறினார்.
கடந்த 2006 திமுக ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல் எப்படி நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், 2011 அதிமுக ஆட்சியில் ஜனநாயக ரீதியாக அமைதியான முறையில் தேர்தல் நடந்தது. வரும் அக்டோபரில் நடக்க உள்ள உள்ளாட்சித் தேர்தலும் நேர்மையாக, சுதந்திரமாக, அமைதியாக நடைபெறும். இத் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு நடைமுறைக்கு வரும் என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறினார்.
வரும் உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடக்கும் என்று சொன்ன அமைச்சருக்கு நன்றி என்று திமுக உறுப்பினர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எழுந்து, பாப்பாபட்டி, கீரிப்பட்டி தேர்தல் பற்றி மா.சுப்பிரமணியன் பேசினார். கடந்த 2006ல் சென்னை மாநகராட்சியின் 155 வார்டுகளுக்கு நடந்த தேர்தலில் 99 வார்டுகளுக்கான தேர்தலை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. அந்த அளவுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டவர்கள் திமுகவினர். எனவே, உள்ளாட்சித் தேர்தல் பற்றி பேச திமுகவினருக்கு தகுதி இல்லை என்று கூறினார்.
இதற்கு பதிலளித்த மா.சுப்ரமணியன், 99 வார்டு களுக்கான தேர்தலை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது என்பது தவறானது. இத்தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தல் குறித்து அதிருப்தி தெரிவித்தது.
நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை சென்னை மாநகராட்சி கொள்கை முடிவு எடுப்பதை தவிர்க்க வேண்டும் என அன்றைய மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன், பாஜக மாநிலத் தலைவர் இல.கணேசன் ஆகியோர் அறிக்கை வெளியிட்டனர். அதைத் தொடர்ந்து 99 கவுன்சிலர்களும் ராஜினாமா செய்து மறு தேர்தலை சந்திக்குமாறு அன்றைய முதல்வர் கருணாநிதி எங்களுக்கு உத்தரவிட்டார் என்றார் மா.சுப்ரமணியன்.
தேர்தல் முறைகேடுகள் குறித்து உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததா, இல்லையா என்பதை அவர் தெரிவிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் கேட்டார். சட்டசபையில் நேற்று இவ்வாறு விவாதம் நடந்தது.
தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருப்பூர், வேலூர், திண்டுக்கல் மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட 12 மாநகராட்சிகளும், 125 நகராட்சிகளும், 529 பேரூராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 12,524 பஞ்சாயத்துகள் உள்ளன.
உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் வரும் அக்டோபர் மாதம் 2ஆம் தேதியோடு முடிகிறது. இதையொட்டி, உள்ளாட்சி அமைப்பு பதவிகள் விரைவில் கலைக்கப்பட்டு, அக்டோபர் மாதத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டசபையில் நேற்று நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டச் செயலாக்கத் துறை மானிய கோரிக்கை மீதான கொள்கை விளக்க குறிப்புகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்தார்.
அதில் கூறியிருப்பதாவது, 'தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994இல் கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய குழு மற்றும் மாவட்ட ஊராட்சிகளில் உள்ள பதவியிடங்கள் மற்றும் தலைமை பதவியிடங்கள் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய வழிவகை செய்யப்பட்டிருந்தது.
ஆனால், தமிழக முதலமைச்சர் ஊரக வளர்ச்சியில் மகளிர் பங்கேற்பை அதிகப்படுத்தவும், மகளிருக்கு உரிய அதிகாரம் வழங்கப்படுவதை மேம்படுத்திடவும் மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீட்டை 50 சதவிகிதமாக உயர்த்துவது அவசியம் என்று கருதியதால், பெண்களுக்கு இடஒதுக்கீடு மூன்றில் ஒரு பங்கு என்பதை உயர்த்தி 50 சதவிகித இடஒதுக்கீடு செய்யும் வகையில் தமிழ்நாடு ஊராட்சிகள் விதியை திருத்தம் செய்து அரசு ஆணை 23.5.2016இல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆணையின்படி வருகிற 2016ஆம் ஆண்டு ஊரக, உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பெண்களுக்கான உயர்த்தப்பட்ட இடஒதுக்கீடு நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.